Last Updated : 03 Oct, 2021 06:15 PM

 

Published : 03 Oct 2021 06:15 PM
Last Updated : 03 Oct 2021 06:15 PM

நீட் தேர்வில் விலக்கு பெறுவதற்கான திறனும், திராணியும் தமிழ்நாட்டுக்கு உண்டு: சு.வெங்கடேசன் எம்.பி.

நீட் தேர்வில் விலக்கு பெறுவதற்கான உரிமையும், திறனும், திராணியும் தமிழ்நாட்டுக்கு உண்டு என்று சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்தார்.

இந்திய மாணவர் சங்கம் சார்பில், திருச்சியில் இன்று நீட் எதிர்ப்பு மாநில மாநாடு நடைபெற்றது. இதில் மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் கலந்துகொண்டார்.

அப்போது அவர் பேசும்போது, ''நீட் தேர்வில் விலக்கு பெறுவதற்கான உரிமையும், திறனும், திராணியும் தமிழ்நாட்டுக்கு உண்டு. போராட்டங்கள்தான் சமூக நீதியை முன்னோக்கி நகர்த்திக் கொண்டிருக்கின்றன. நாட்டில் மக்களுக்கு வழங்கப்பட்ட ஒவ்வொரு உரிமைக்குப் பின்னாலும் போராட்டம் இருக்கும்.

நீட் தேர்வு, மாநில உரிமைகள்- கல்வி உரிமைகளைக் குத்திக் கிழிப்பதாகவும், கற்பித்தலைக் கொன்று, தனிப் பயிற்சி வகுப்புகளைக் கொண்டாடுவதாகவும், மாணவர்களின் நம்பிக்கையைச் சிதைத்து, தற்கொலைக்குத் தூண்டுவதாகவும் உள்ளது.

நீட் தேர்வு என்பது கல்விப் பிரச்சினையோ, மருத்துவர்கள் பிரச்சினையோ, மாணவர்கள் பிரச்சினையோ அல்ல. மாநில உரிமை, சுயாட்சி, கூட்டாட்சி, காலம் காலமாகக் கட்டமைக்கப்பட்டுள்ள மருத்துவ வசதி தொடர்புடையது.

நீட் தேர்வில் விலக்கு விவகாரத்தில் தீர்வு காணும்வரை எல்லா அரசியல் இயக்கங்களும் உயிர்ப்போடு இயங்கச் செய்யும் வேலையை மாணவர் சமூகம் செய்ய வேண்டும். நீட் தேர்வில் இருந்து மத்திய அரசு பின்வாங்கும் வரை தமிழ்ச் சமூகம் போராட்டத்தைக் கைவிடாது என்று மாணவர்கள் நிரூபிக்க வேண்டும்'' என்று சு.வெங்கடேசன் தெரிவித்தார்.

பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளரும், கல்வியாளருமான பிரின்ஸ் கஜேந்திரபாபு பேசும்போது, “நீட் என்பது மருத்துவ மாணவர் சேர்க்கையோடு நிற்காமல், மற்ற அறிவியல் படிப்பில் சேர நினைக்கும் மாணவர்களையும் பாதிக்கும் வகையில் உள்ளது. நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் திண்ணைகள்தோறும் பிரச்சாரம் செய்ய வேண்டும்" என்று தெரிவித்தார்.

இந்த மாநாட்டில், “நீட் தேர்வில் விலக்கு கோரும் தீர்மானத்துக்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்க வேண்டும். தேசியக் கல்விக் கொள்கையை ரத்து செய்ய வேண்டும். கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். நீட், நெக்ஸ்ட் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும். மாணவர்களின் தற்கொலைகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மத்திய- மாநில அரசுகள் எடுக்க வேண்டும்” என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x