

புதுச்சேரியில் புதிதாக 82 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் உயிரிழப்பு ஏற்படவில்லை.
இது குறித்து, புதுச்சேரி சுகாதாரத்துறை செயலாளர் அருண் இன்று (அக். 02) வெளியிட்ட தகவல்:
"புதுச்சேரி மாநிலத்தில் 5,012 பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டது. இதில், புதுச்சேரி - 50, காரைக்கால் - 21, ஏனாம் - 3, மாஹே - 8 பேர் என, மொத்தம் 82 பேருக்கு (1.64 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால், மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 26 ஆயிரத்து 513 ஆக அதிகரித்துள்ளது. இதில், தற்போது மருத்துவமனைகளில் 110 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 657 பேரும் என, 767 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
புதிதாக உயிரிழப்பு ஏற்படவில்லை. இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,840 ஆகவும், இறப்பு விகிதம் 1.45 சதவீதமாகவும் உள்ளது. புதிதாக 106 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 23 ஆயிரத்து 906 (97.94 சதவீதம்) ஆக உள்ளது.
மாநிலத்தில் இதுவரை 10 லட்சத்து 15 ஆயிரத்து 655 பேருக்கு (இரண்டு டோஸ் உட்பட) தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது".
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.