Published : 09 Mar 2016 08:15 AM
Last Updated : 09 Mar 2016 08:15 AM

பெண்களுக்கு சம உரிமை உறுதிப்படுத்தும் அரசியலமைப்பை உருவாக்கியவர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்: மகளிர் தின விழாவில் ஆளுநர் ரோசய்யா பேச்சு

பெண்களுக்கு சம உரிமையை உறுதிப்படுத்திய அரசியல் அமைப்பை உருவாக்கியவர் களுக்கு மகளிர் தினத்தில் நன்றி தெரிவிக்க வேண்டும் என தமிழக ஆளுநர் கே.ரோசய்யா கூறினார்.

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, சக்தி மண்டல் சகயோக் சார்பில் 25-வது மகளிர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி பெண்களின் சிறப் பான செயல்பாடுகளுக்கான விருதுகள் வழங்கப்பட்டன.

சென்னை, கிண்டி ஆளுநர் மாளிகை வளாகத்தில் நடந்த இந்த விழாவில், விருதுகளை வழங்கி ஆளுநர் கே.ரோசய்யா பேசியதாவது:

உலக மக்கள்தொகையில் பாதிக்கு மேல் பெண்கள் உள்ளனர். சமூகத்தின் முக்கியமான தாங்கு தூணும் பெண்கள்தான். பழங்கால இந்தியாவின் வேத காலத்தில் ஆண்களுக்கு இணை யான சம உரிமையை பெண்கள் அனுபவித்தனர். ஆன்மிகத்திலும் பெண்களின் பங்களிப்பு போது மான அளவுக்கு இருந்தது. இடைக் காலத்தில், பெண்களுக்கான சம உரிமை மறுக்கப்பட்டது. சதி மூலம் விதவைப் பெண்கள் மோசமாக நடத்தப்பட்டனர். பெண்களுக்கு சொத்துரிமை, கல்வி மறுக்கப்பட்டதுடன், குழந்தை திருமணம், பலதார மணம் மற்றும் விதவை மறுமணம் மறுப்பு போன்றவை சமூகத்தில் நிலைத்திருந்தன.

இவற்றிலிருந்து பெண்கள் விடுதலை பெறுவதற்காக முதல் முயற்சி எடுத்த ராஜாராம் மோகன்ராய், மகாத்மா காந்தி, அன்னிபெசன்ட், சரோஜினி நாயுடு போன்றவர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.

விடுதலைக்குப் பின், பெண்கள் அதிகளவில் முன்னேற்றம் அடைந் துள்ளனர். இந்திய அரசியலமைப் பும் பெண்களுக்கு சம உரிமையை உறுதிப்படுத்தியுள்ளது. இதற்கு அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். கல்வி மற்றும் நவீனமயமாக்கல் பெண் கள் மத்தியில் உரிமை தொடர் பான விழிப்புணர்வை ஏற்படுத்தி யுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை சமூகத் தின் எல்லா பிரிவுகளிலும் பெண்களின் நிலையை உயர்த்தி அவர்களுக்கு அதிகாரமளித்தல், வேற்றுமையை ஒழித்தல், பெண் களுக்கு எதிரான வன்முறைகளை தடுத்தல் போன்றவற்றுக்கு முயற்சி எடுத்துள்ளது. மேலும், பாலின சம உரிமை, பெண் குழந்தைகள், கல்வி, மருத்துவம் மற்றும் அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு சம பங்களிப்பு ஆகியவற்றின் மூலம், இந்த உலகை பெண்களுக்கான சிறப்பான பகுதியாக மாற்றுவதே ஐக்கிய நாட்டு பெண்கள் அமைப்பின் முக்கிய திட்டமாகும். அனைத்து வகையிலான வேற்று மைகளுக்கும் முடிவு கட்டுதல், பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை ஒழித்தல், ஆண், பெண் குழந்தைகளுக்கு சமமான ஆரம்ப, இடைநிலை கல்வியை அளித்தல் ஆகியவற்றை இந்த உலக மகளிர் தினத்தின் நோக்கமாக ஐக்கிய நாடுகள் நிறுவனம் கொண்டுள்ளது.

மகளிர் தினம் என்பது அவர்களின் தைரியம் மற்றும் உறுதிக்காக மட்டும் கொண்டாடப்படுவதில்லை. சிறந்த பெண்களின் சாதனைகளை அங்கீகரிப்பதுடன், அதிகளவிலான பெண்களை அதிகார நிலைக்கு வரவழைப்பதற்கான பாதையை உருவாக்கவும் கொண்டாடப்படுகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், ஜெர்மனி தூதரக அதிகாரியின் மனைவி டைடெம் ஆதன் பெபிக், மோகினியாட்ட கலைஞர் கோபிகா வர்மா, சக்தி மண்டல் சகயோக் தலைவர் வீணா மல்கோத்ரா, செயலாளர் விபா ஜெயின், ஒருங்கிணைப்பாளர்கள் ஜெய்ஸ்ரீ மிட்டல், வீணா அகர்வால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x