Published : 01 Oct 2021 12:58 PM
Last Updated : 01 Oct 2021 12:58 PM

டெல்டா மாவட்டங்களில் இன்று அதி கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

டெல்டா மாவட்டங்களில் இன்று அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் இன்று (அக். 01) வெளியிட்ட அறிவிப்பு:

"இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் (3.1 கி.மீ. உயரம் வரை) நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக, இன்று புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய அதி கனமழை பெய்யக்கூடும்.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழையும், கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும்.

ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியில் 19 செ.மீ., சிவகங்கை, மதுரை மாவட்டம் புலிப்பட்டியில் தலா 12 செ.மீ., திருச்சி மாவட்டம் அணை பகுதி, திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் தலா 11 செ.மீ., ஈரோடு மாவட்டம் பவானி, பெரம்பலூரில் தலா 10 செ.மீ., குறைந்தபட்சமாக ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்களம், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர், நீலகிரி மாவட்டம் தேவலா பகுதியில் தலா 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

வங்கக் கடல் பகுதிகள்:

01.10.2021: தெற்கு வங்கக் கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

02.10.2021, 03.10.2021: தமிழக கடலோர பகுதிகள், குமரிக் கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்".

இவ்வாறு புவியரசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x