Published : 01 Oct 2021 11:07 AM
Last Updated : 01 Oct 2021 11:07 AM

சிவாஜி கணேசன் பிறந்தநாள்: மணிமண்டபத்தில் சிலைக்கு மாலை அணிவித்து முதல்வர் ஸ்டாலின் மரியாதை

நடிகர் சிவாஜி கணேசனின் பிறந்தநாளை ஒட்டி சென்னை அடையாறில் அமைந்துள்ள அவரது மணிமண்டபத்துக்குச் சென்ற முதல்வர் ஸ்டாலின், சிவாஜியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அவருடன் நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன், அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் திமுக நிர்வாகிகள் சென்றிருந்தார். மணிமண்டபத்தில் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு அங்கிருந்த புகைப்படங்களைப் பார்வையிட்டார். பின்னர் முதல்வர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

முதல்வர் வருகைக்கு, நடிகரும் சிவாஜியின் மகனுமான பிரபு நன்றி தெரிவித்திருக்கிறார்.

முன்னதாக நடிகர் சிவாஜியின் பிறந்தநாளை ஒட்டி அரசு நேற்று ஒரு செய்திக் குறிப்பு வெளியிட்டது.

அதில், "நடிகர் திலகம் செவாலியர் சிவாஜி கணேசன் 1927 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 1 ஆம் நாள் பிறந்தார். “நடிப்பு தனது மூச்சு என்றும் நடிப்பு ஒன்றுதான் தனக்குத் தெரிந்த தொழில், நடிப்புதான் எனக்குத் தெய்வம்” என்று மிகத் தெளிவாக தன்சுயசரிதையில் குறிப்பிட்டு அதற்கேற்ப வாழ்ந்தும், நடிப்பிலே உச்சம் தொட்டும், உலகப் புகழ் பெற்றவரவர்.

குழந்தைப் பருவம் முதற்கொண்டே நடிப்பதில் பேரார்வம் கொண்டு, பல்வேறு நாடக குழுக்களில் பங்கேற்று நடித்து வந்தார். அண்ணாவால் எழுதப்பட்ட “சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம்” என்கிற நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக நடித்த அவரின் நடிப்புத் திறமையினைக் கண்ட பெரியார் வியந்து பாராட்டியதோடு, விழுப்புரம் சின்னையப் பிள்ளை கணேசன் என்ற அவரது இயற்பெயரை “சிவாஜி கணேசன்” என்று பெயர் சூட்டினார். உலகப் புகழ்பெற்ற நடிகர் திலகத்திற்கு இந்த பெயரே இறுதிவரை நிலைத்து நின்றது.

கருணாநிதியால், ‘பொங்கு தமிழர் கண்டெடுத்த புதையல், புத்தர் வழிவந்த காந்தி மகான் பக்தர்’ நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்று பெருமையோடு குறிப்பிட்டதோடு, அவர் எழுதிய பராசக்தி, மனோகரா உள்ளிட்ட பல படங்களில் நடித்ததன் மூலம் நடிகர் திலகம் திரைவானிலே புதிய உச்சம் தொட்டார்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு பெருமைச் சேர்க்கும் வகையில் அவருடைய நினைவு நாளில் 21.07.2006 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் சார்பில், சென்னை கடற்கரை காமராசர் சாலையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் திருவுருவச் சிலையினை திறந்து வைத்தார்.

அன்னாருடைய அருமை பெருமைகளை போற்றுகின்ற வகையில் அவரின் பிறந்த நாளானது அரசு விழாவாக அறிவிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.

உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட அற்புத கலைஞன்தான் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். எது நடிப்பு, எது இயல்பு என காண்போர் அறிந்திடா வண்ணம், ஒட்டுமொத்த உணர்ச்சிக் குவியல்களை வெள்ளித் திரையில் கொட்டி வெற்றி வீரராகவே வலம் வந்தவர். இந்த பூமி பந்தில், மனித குலத்தின் கடைசி ரசிகன் உயிர்வாழும் வரை, சிவாஜி கணேசன் என்கிற சகாப்தத்துக்கு மரணமுமில்லை.. காலமுமில்லை" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x