Published : 30 Sep 2021 11:19 AM
Last Updated : 30 Sep 2021 11:19 AM

அரசின் நலத்திட்ட உதவித் தொகை வழங்குவதை அஞ்சலக வங்கிக்கு மாற்ற வேண்டாம்: வைகோ

அரசின் நலத்திட்ட உதவித் தொகை வழங்குவதை அஞ்சலக வங்கிக்கு மாற்ற வேண்டாம் என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, வைகோ இன்று (செப். 30) வெளியிட்ட அறிக்கை:

"தமிழக அரசின் சமூக நலப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் வழங்கப்படும் உதவித் தொகையினை, இந்திய அஞ்சலக வங்கிக்கு மாற்றும் அரசின் முடிவைக் கைவிட்டு, பனிரெண்டாயிரம் வங்கி வணிகத் தொடர்பாளர்களின் வாழ்வைப் பாதுகாக்க வேண்டும்.

மாநிலம் முழுவதும் அனைத்துப் பொதுத்துறை வங்கிகளின் கீழ், ஒப்பந்த அடிப்படையில் 12,000 பேர் வணிகத் தொடர்பாளர்களாக பணியாற்றி வருகின்றனர்.

முதியோர் உதவித் தொகை மற்றும் தமிழக அரசின் சமூக நலப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித் தொகை வழங்கும் பணியினை, ஒவ்வொரு மாதமும் இவர்கள் சிறப்பாகச் செய்து வருகின்றனர்.

இந்தப் பணிகளில் அதிகளவில் பெண்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வங்கிகள் அளிக்கும் ஊக்கத் தொகை மட்டுமே வங்கி வணிகத் தொடர்பாளர்களின் வாழ்வாதாரம் ஆகும். கிராமப்புற மக்களுக்கான வங்கிச் சேவைகள் அனைத்தும், இவர்கள் மூலம் மிக எளிதாகக் கிடைக்கின்றது.

கரோனா பேரிடர் காலத்திலும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, கிராமப்புறங்களில் உள்ள வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இருப்பிடத்துக்கே நேரடியாகச் சென்று உதவித் தொகை வழங்கி வருகின்றார்கள்.

மேலும், கடந்த 15 ஆண்டுகளில் மத்திய அரசின் முக்கிய நோக்கமான, அனைத்து மக்களுக்கும் வங்கிக் கணக்குத் தொடங்கிடும் சேவையை மிகச்சிறப்பாகச் செய்வதற்கு, வங்கித் தொடர்பாளர்கள் பெரிதும் காரணமாக இருந்துள்ளனர்.

இதுதவிர, ஆதார் எண் இணைக்கும் பணிகள், மத்திய அரசு வழங்கும் 2 லட்சம் ஆயுள் காப்பீடு, 2 லட்சம் விபத்துக் காப்பீடு இவற்றை வழங்கிட மக்களுக்கு புரிதல் ஏற்படுத்தி, அவர்களை இணைத்து வருகின்றார்கள்.

கடந்த வருடம் மகளிருக்கு கரோனா நிவாரண உதவித் தொகை ரூ.1,500-ஐ வீடு வீடாகச் சென்று வழங்கியதுடன், கிசான் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கான ரூ.6,000, தமிழக அரசின் மகப்பேறு உதவித் தொகை, தமிழக அரசின் மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை, 100 நாள் வேலை வாய்ப்பு ஊதியம் மற்றும் எரிவாயு மானியம் உள்ளிட்ட அரசின் அனைத்து உதவித் தொகைகளையும், இந்த வங்கித் தொடர்பாளர்கள் மூலம் பூஜ்ஜியம் கணக்கில் தடையின்றி வழங்கப்பட்டு வருகின்றது.

இதனை அஞ்சலக வங்கிக்கு மாற்ற முயலும் மத்திய அரசின் கொள்கை முடிவானது, இதுவரை மிக எளிதாக மக்களுக்கு உதவித் தொகை வழங்கிடும் பணிகளில் சுணக்கம் ஏற்படுத்தும்.

மேலும், ஆயிரக்கணக்கான வங்கி வணிகத் தொடர்பாளர்களின் வேலைவாய்ப்பு பாதிக்கப்படும். பத்து ஆண்டு காலமாக இதனை மட்டுமே நம்பி வாழும், அவர்களது குடும்பம் வறுமை நிலைக்குத் தள்ளப்படும்.

ஆகவே, அரசின் உதவித் தொகையினை வழங்குவதற்கு, இந்திய அஞ்சலக வங்கிக்கு மாற்றும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்.

தமிழக அரசும் ஏற்கெனவே வழங்கி வரும் அரசின் உதவித் தொகையை, வங்கி வணிகத் தொடர்பாளர்களின் மூலமே தொடர்ந்து வழங்கிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன்".

இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x