Published : 30 Sep 2021 07:45 AM
Last Updated : 30 Sep 2021 07:45 AM

மதுரவாயல்- துறைமுகம் இடையே 2 அடுக்கில் பறக்கும் சாலை திட்டம்; திட்ட அறிக்கை கிடைத்ததும் பணிகள் தொடங்கப்படும்: நெடுஞ்சாலைத் துறை செயலர் தீரஜ் குமார் தகவல்

சென்னை

நாட்டில் முதல் முறையாக 2 அடுக்கு சாலையாக அமையவுள்ள மதுரவாயல்- துறைமுகம் பறக்கும் சாலைக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி 3 மாதங்களில் நிறைவடையும். திட்ட அறிக்கை கிடைத்ததும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் நிதி முதலீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று நெடுஞ்சாலைத் துறை செயலர் தீரஜ் குமார் தெரிவித்துள்ளார்.

கடந்த 2007-ம் ஆண்டு திமுக ஆட்சியில், மதுரவாயல் - சென்னை துறைமுகம் இடையில் பறக்கும் சாலை திட்டம் உருவாக்கப்பட்டது. ரூ.1,815 கோடி மதிப்பிலான இத்திட்டத்துக்கு 2007-ல் பிரதமராக இருந்த மன்மோகன் சிங் அடிக்கல் நாட்டினார். 2011-ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், அப்போதைய அதிமுக அரசு, திட்டம் தொடர்பாக ஆய்வு செய்தது.

கூவத்தின் நீர்வழித்தடத்தை மாற்றும் வகையில் இத்திட்டம் இருப்பதாக கூறி இதற்கு தடை விதித்தது. கோயம்பேடு முதல் மதுரவாயல் வரை மற்றும் கூவம் ஆற்றின் ஓரத்தில் தூண்கள் அமைக்கப்பட்ட நிலையில், பணிகள் நிறுத்தப்பட்டன.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின், தமிழக முதல்வரான பழனிசாமி, மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து இத்திட்டம் குறித்து பேசியபின், அதை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து, திட்டத்தின் மதிப்பீடு ரூ.1,815 கோடியில் இருந்து 2018-ல் ரூ,2,400 கோடியாகவும், அதன்பின் ரூ.3,087 கோடியாகவும் அதிகரிக்கப்பட்டு, திட்டத்தை மறு வடிவமைப்பு செய்வதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது.

இத்திட்டத்துக்க்காக சிந்தாதிரிப்பேட்டை, எழும்பூர், அமைந்தகரை, நுங்கம்பாக்கம், அரும்பாக்கம், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் 6,993 சதுர மீட்டர் தனியார் நிலம், 2,722 சதுர மீட்டர் அரசு நிலம் கையகப்படுத்தப்பட்டன.

இந்த சாலைக்கு கடற்கரை ஒழுங்காற்று மண்டலத்திலும் அனுமதி பெறப்பட்டுள்ளது. இந்நிலையில் இத்திட்டத்தை செயல்படுத்த சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டுள்ளது. இதையடுத்து, துறைமுக பறக்கும் சாலை, நவீன தொழில்நுட்பத்துடன் இரண்டு அடுக்கு சாலையாக அமைக்கப்பட உள்ளது.

இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை செயலர் தீரஜ் குமார் கூறியதாவது:

மதுரவாயல் - துறைமுகம் சாலையின் முதல் அடுக்கில் பேருந்துகள், இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் செல்லும் வகையில் 6 வழிச்சாலையாக அமைக்கப்படுகிறது. இதில் அணுகு சாலை அமைப்பதற்கான திட்டமிடல் நடைபெற்று வருகிறது. இரண்டாம் அடுக்கில் 4 வழிச்சாலையானது மதுரவாயல் முதல் துறைமுகம் வரை செல்லும். இதில் கண்டெய்னர் உள்ளிட்ட சரக்கு வாகனங்கள் செல்லும்.

நவீன தொழில்நுட்பத்துடன், கூடுதல் எடையை தாங்கும் வகையில் இப்பாலம் கட்டப்பட உள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி 3 மாதங்களில் முடிக்கப்படும். திட்ட அறிக்கை கிடைத்ததும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் நிதி முதலீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x