Published : 29 Sep 2021 03:21 AM
Last Updated : 29 Sep 2021 03:21 AM

நாட்டுப்புற பாடல்கள் பாடி அறிவியலை நேசிக்க வைக்கும் அரசு பள்ளி ஆசிரியர்: தனித்துவமான கற்பித்தல் பாணியால் அசத்தல்

மாணவியரிடம் நாட்டுப்புறப்பாடல் பாடி அறிவியல் பாடம் நடத்தும் ஆசிரியர் நா.தவமணி.

மதுரை

அறிவியல் பாடத்தை நாட்டுப்புறப் பாடல் மூலம் நடத்தி மாணவர்களை ஆர்வத்துடன் கற்க வைக்கிறார் அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர்.

மேலூர் அருகேயுள்ள நாகப்பன் செவல்பட்டியைச் சேர்ந்தவர் ஆசிரியர் நா.தவமணி. 2004-ல் நாகை மாவட்டம் புதுபட்டினம் கிராம அரசுப் பள்ளியில் அறிவியல் ஆசிரியராக நியமிக்கப்பட்டார்.

இவர் நாட்டுப்புறப் பாடல்கள் வழியாக பாடங்களைக் கற்பித்து மாணவர்களிடம் ஆர்வத்தைத் தூண்டி அறிவியலை நேசிக்க வைத்துள்ளார்.

இது குறித்து ஆசிரியர் தவமணி கூறியதாவது:

1988-89-ல் மதுரை தியாகராசர் கல்வியியல் கல்லூரியில் பிஎட் படித்தபோது கொல்லங்குடி கருப்பாயியின் நாட்டுப்புற பாடல்களால் ஈர்க்கப்பட்டேன்.

அப்போது முதல் கல்லூரி நிகழ்ச்சிகளில் நானே நாட்டுப்புற பாடல்கள் எழுதி பாடுவேன். வானொலி நிலையத்திலும் பாடும் வாய்ப்புக் கிடைத்தது.

இந்நிலையில்தான் நாகை புதுப்பட்டினத்தில் ஆசிரியர் பணி கிடைத்தது. அறிவியல் பாடத்தில் ஆர்வமில்லாத மாணவர்களுக்கு நாட்டுப்புறப் பாடல்கள் வாயிலாகப் பாடம் நடத்த முடிவு செய்தேன். பாடங்களை பாடல் வரிகளாக்கி தனி ராகத்துடன் பாடம் நடத்தத் தொடங்கினேன்.

உதாரணமாக அன்றாட வாழ்க் கையில் என்னென்ன உலோ கங்களை பயன்படுத்துகிறோம் என்பதை நாட்டுப்புறப் பாடல்கள் வழியாக நடத்தினேன். மாணவர் கள் ஆர்வமாகக்கவனிக்கத் தொடங்கினர்.

2007-ல் மதுரை கொட்டாம்பட்டி பள்ளிக்கு மாறுதலானேன். அங் கும் அதே பாணியில் பாடம் நடத்தினேன். 2013- முதல் 2015 வரை தொடர்ச்சியாக எனது மாணவர்கள் 12 பேர் அறிவியல் பாடத்தில் முழு மதிப்பெண்கள் பெற்றனர். பாடங்களை விரும்பும் வகையில் கற்பித்தால் எந்தக் கல்வியையும் மாணவர்களை நேசிக்க வைக்கலாம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x