Published : 26 Sep 2021 03:27 AM
Last Updated : 26 Sep 2021 03:27 AM

மனைவி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த கணவர்: குழந்தையுடன் மாயமானவரை தேடும் காவல் துறையினர்

திருப்பத்தூர்

திருப்பத்தூர் அடுத்த புதுப்பூங் குளம் பகுதியைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (30). இவர், திருப்பத்தூர் ஆர்டிஓ அலுவலகம் அருகே ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி நடத்தி வருகிறார். இவரது மனைவி திவ்யா (24). இவர்களுக்கு வர்ஷினிஸ்ரீ (3) என்ற பெண் குழந்தை உள்ளது.

இதற்கிடையில், குடும்ப பிரச்சினை காரணமாக திவ்யா தனது குழந்தையுடன் இரண்டு வாரங்களுக்கு முன்பு தாய் வீட்டுக்குச் சென்று விட்டார். அங்கு நேற்று காலை சென்ற சத்தியமூர்த்தி, புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு கோயிலுக்குச் செல்லலாம் என்று கூறி மனைவி, குழந்தையை காரில் அழைத்துக்கொண்டு எலவம்பட்டி கிராமத்தில் மறைவான இடத்துக்குச் சென்றதும் மனைவி திவ்யா மீது திடீரென பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு குழந்தை யுடன் தப்பியுள்ளார். உடலில் தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிய திவ்யாவை மீட்ட பொதுமக்கள் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

இதற்கிடையில், சத்தியமூர்த்தி சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை பதிவு செய்துவிட்டு தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டார். அந்த வீடியோவில், ‘‘தான் திருப்பத்துாரில் சக்தி ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி நடத்தி வருவதாகவும், தனக்கு இரண்டு சிறுநீரகங்கள் செயலிழந்து விட்டது. நான் இறந்த பிறகு எனது மனைவி, குழந்தையை யாரும் பார்க்க மாட்டார்கள்.

இதனால், மனைவி, மகளை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்துகொள் வதாகவும், யாரும் தேட வேண்டாம்’’ என கூறியுள்ளார். இதுகுறித்து கந்திலி காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x