

புதுச்சேரியில் புதிதாக 94 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் உயிரிழப்பு ஏற்படவில்லை.
இதுகுறித்துப் புதுச்சேரி சுகாதாரத்துறைச் செயலர் அருண் இன்று (செப். 24) வெளியிட்ட தகவல்:
''புதுச்சேரி மாநிலத்தில் 4,836 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி-65, காரைக்கால்- 25, மாஹே- 4 பேர் என மொத்தம் 94 பேருக்கு (1.94 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 25 ஆயிரத்து 920 ஆக அதிகரித்துள்ளது. இதில் தற்போது மருத்துவமனைகளில் 122 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 834 பேரும் என 956 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
புதிதாக உயிரிழப்பு ஏற்படவில்லை. இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,834 ஆகவும், இறப்பு விகிதம் 1.46 சதவீதமாகவும் உள்ளது. புதிதாக 107 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 23 ஆயிரத்து 130 (97.78 சதவீதம்) ஆக உள்ளது. மாநிலத்தில் இதுவரை 9 லட்சத்து 51 ஆயிரத்து 267 பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.’’
இவ்வாறு அருண் தெரிவித்துள்ளார்.