Published : 22 Sep 2021 09:31 AM
Last Updated : 22 Sep 2021 09:31 AM

காந்தி: கோட் சூட்டிலிருந்து அரையாடைக்கு மாறிய நூற்றாண்டு

இன்று செப்டம்பர் 22. காந்தி மேலாடை துறந்த தினம். தேசத் தந்தை மகாத்மா காந்தி என்றதும், நம் நினைவில் நிற்பது எளிமையான உடையில் வலம் வந்த அவரின் உருவம்தான். அவரது இடைக்கால வாழ்க்கையில் ஏற்பட்ட இந்தத் தோற்றத்தின் பின் ஒரு வரலாறே அடங்கியுள்ளது. அது தமிழரோடு தொடர்புடையது என்பது நமக்குக் கிடைக்கும் பெருமை.

காந்தியின் வாழ்க்கையில் தமிழருக்கு என, ஒரு தனி இடம் உண்டு. மேல்நாட்டில் சட்டப் படிப்பு பயின்ற மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி 1888ஆம் ஆண்டுவாக்கில் கோட்-சூட் என வெளிநாட்டினரின் உடைகளை அணியும் பழக்கத்தைக் கொண்டிருந்தார். அதற்கு 33 ஆண்டுகளுக்குப் பிறகு 1921ஆம் ஆண்டு தமிழகத்தில் மதுரைக்குச் சென்ற அவர் இடுப்பில் வேட்டி, தோளில் துண்டு எனத் தனது ஆடைப் பழக்கத்தை மேற்கொண்டார்.

பாரிஸ்டர் பட்டம் பெற்ற காந்தி ஒரே நாளில் காந்தி தன்னை முற்றிலுமாக மாற்றி அரை நிர்வாண நிலைக்கு மாறிவிடவில்லை. இவை எல்லாம் படிப்படியாக நிகழ்ந்தது.

ஒருமுறை சம்பராண் பகுதியில் உள்ள விவசாயிகளைச் சந்திக்க காந்தி மோதிஹாரி என்ற ரயில் நிலையம் வந்தடைந்தார். அப்போது, காந்தியைப் பார்க்க ஏராளமானோர் வந்திருந்தனர். அவர்களுள் பலர் மேலாடை இல்லாமல் இருந்தனர். அது காந்தியடிகள் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது.

காந்தியடிகளைச் சந்திக்க வந்த தொழிலாளிகள் தங்கள் கஷ்டங்களை எடுத்துரைத்தனர். தங்களுக்கு ஆலை நிர்வாகம் பல நெருக்கடிகளைத் தருவதாகக் கூறினர்.

அவர்கள் காலணி அணிய ஆலை நிர்வாகம் அனுமதிப்பதில்லை என்ற தகவலையும் தெரிவித்தனர். காலணி அணியாமல் ஒரு மனிதன் நடப்பதில் உள்ள சிரமத்தைப் புரிந்துகொண்டார் காந்தியடிகள். இனி தானும் காலணி அணியப் போவதில்லை என அன்றைய தினமே முடிவெடுத்தார். அதன்பிறகு வெறுங்காலில் நடப்பதை வழக்கமாக்கிக் கொண்டார்.

விவசாயக் கூலிப் பெண்களிடையே தூய்மை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று காந்தியடிகள் நினைத்தார். தன் மனைவி கஸ்தூரிபாயிடம் சொல்லி பெண்கள் தினசரி குளித்து தூய ஆடை அணிய வேண்டும் என்று கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தும்படி கூறினார். கஸ்தூரிபாயுடன் தானும் அந்த விழிப்புணர்வு பிரச்சாரத்துக்குச் சென்றார்.

அப்போது ஒரு கிராமத்தில் உள்ள பெண்களிடம் அதைப் பற்றிப் பேசியபோது, "உடுக்க ஒரே ஒரு ஆடை மட்டுமே என்னிடம் உள்ளது. இருக்கிற ஒரு ஆடையையும் துவைக்க வேண்டுமென்றால் அது உலரும்வரை நான் எதை உடுத்துவது?" என்று எதிர்க்கேள்வி கேட்டார் அந்தப் பெண்.

அந்தக் கேள்வியைச் சற்றும் எதிர்பார்க்காத காந்தி அதிர்ந்து போனார். அந்தப் பெண் கேட்ட கேள்வியில் இருந்த எதார்த்தத்தைப் புரிந்துகொண்டார் காந்தியடிகள்.

"எனக்கு இன்னொரு சேலை வாங்கிக் கொடுங்கள். நான் ஒரு சேலையைத் துவைத்துக் காயப்போடும்போது இன்னொரு சேலை மாற்று சேலையாக உடுத்துக் கொள்ள உதவியாக இருக்கும்" என்று காந்தியிடம் கோரிக்கை வைத்தார் அந்தப் பெண்.

அப்போதுதான் உடுக்க மாற்றுச் சேலைகூட இல்லாத பெண்கள் உள்ளனர் என்பதைத் தெரிந்து கொண்டார் காந்தி. உடனே தன் மேல் துண்டை எடுத்து அந்தப் பெண்ணுக்குக் கொடுக்கச் செய்தார். அன்று முதல் இனி நான் மேல் துண்டும் அணிவதில்லை என்று முடிவு செய்தார்.

1918ஆம் ஆண்டு ஒரு தொழிற்சாலையில் வேலை செய்யும் தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்தில் கலந்துகொள்ள தலைப்பாகை அணிந்து கொண்டு சென்றார் காந்தியடிகள். போராட்டத்துக்கு வந்திருந்த மக்களின் நிலைமை பார்ப்பதற்குப் பரிதாபமாக இருந்தது. அவர்கள்முன் தான் ஒரு ராஜா போன்று நிற்பது காந்தியடிகளின் மனதில் ஒரு நெருடலை ஏற்படுத்தியது.

"தான் அணியும் தலைப்பாகைக்குப் பயன்படுத்தும் துணியில் குறைந்தது நான்கு பேர் அணியும் ஆடை தைத்துக் கொள்ளலாமே . தனக்கு இந்தத் தலைப்பாகை தேவைதானா?" எனச் சிந்தித்தார். இனி தலைப்பாகையும் அணிவதில்லை என்று முடிவு செய்தார்.

இப்படி ஒவ்வொன்றாகத் துறந்து வந்த காந்தியடிகள் 1921ஆம் ஆண்டு செப்டம்பர் 20ஆம் நாள் முதல் 22ஆம் நாள் வரை மதுரை மேல மாசி வீதியுள்ள ஒரு வீட்டில் தங்கி அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள நேரிட்டது. அங்கேயும் அவர் கண்களில் தென்பட்டவர்களுள் பெரும்பான்மையினர் மேலாடை இல்லாத பாமர விவசாயிகளாகவே இருந்தனர்.

இந்தியாவின் முதுகெலும்பே கிராமப்புறங்களில்தான் இருக்கிறது என்ற காந்தி, மதுரையில் ஏழை விவசாயிகள் மேலாடை அணிய முடியாத நிலையில் வறுமையில் இருப்பதைக் கண்டு மனம் நொந்தார்.

பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசுக்கு இந்தியாவின் நிலைமையைப் புரிய வைக்க இவர்களைப் போலவே தானும் இருக்க வேண்டும் என்று முடிவெடுத்தார்.

இனி தானும் மேலாடை அணியப் போவதில்லை என்று மதுரையில் வைத்து முடிவு செய்தார். அவை பின்னாளில் வேட்டியும் தோளில் துண்டும் அந்நிய ஆடைகளை விலக்கும் சத்தியாகிரக போராட்டத்தின் ஓர் அடையாளச் சின்னமாக மாறியது. இது காந்தியை ஏழை மக்களுக்கு மேலும் நெருக்கமானவராக்கி, மக்களை அவரை நோக்கி ஈர்த்தது.

"பலம் உங்கள் உடலிலிருந்து வருவதில்லை, அது உங்கள் மனதில் இருந்து பிறப்பது!" - காந்தியடிகள்

வேல். ஷாருக்,

டிஜிட்டல் மாணவப் பத்திரிகையாளர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x