Published : 22 Sep 2021 03:05 AM
Last Updated : 22 Sep 2021 03:05 AM

தமிழகத்தில் ஆக்கிரமிப்பில் உள்ள 16,250 ஹெக்டேர் வனப்பகுதியை மீட்க நடவடிக்கை: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

தமிழகத்தில் ஆக்கிரமிப்பில் உள்ள சுமார் 16,250 ஹெக்டேர் வனப்பகுதியை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

நீலகிரி மாவட்டம், நடுவட்டம் கிராமத்தில் பெண் மருத்துவர் ஒருவர் தமிழ்நாடு மலைப்பகுதி கட்டிடங்களுக்கான சட்ட விதிகளை மீறி ரிசார்ட் கட்டி வருவதாகவும், அதற்காக வன நிலங்களை ஆக்கிரமித்துள்ளதாகவும் கூறி கூடலூரைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, உடனடியாக ஆய்வு செய்து, ஆக்கிரமிக்கப்பட்ட வனப்பகுதியை மீட்க வேண்டும் என்றும், ஆக்கிரமிப்பு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், “தமிழகம் முழுவதும் 16,250 ஹெக்டேர் அளவுக்கு வனப்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலத்தை மீட்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் மனுதாரர் தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ள நடுவட்டம் பகுதியில் இருந்த வன ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு, அந்த இடம் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அவற்றை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், உச்ச நீதிமன்றம் வன ஆக்கிரமிப்பு தொடர்பாக பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்த பிறகும் தமிழகத்தில் சுமார் 16,250 ஹெக்டேர் அளவுக்கு வனப்பகுதி ஆக்கிரமிப்பில் உள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், மனித குலத்துக்கு பயனளிக்கும் வனத்தை பாதுகாப்பது அவசியம் எனவும் கருத்து தெரிவித்தனர்.

மேலும், வனப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பை விரைந்து அகற்றும் நடவடிக்கையை தொடர வேண்டும் என அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x