Published : 16 Sep 2021 04:13 PM
Last Updated : 16 Sep 2021 04:13 PM

நீட் தேர்வு எழுதிய செங்கல்பட்டு மாணவி தற்கொலை முயற்சி

செங்கல்பட்டு அருகே நீட் தேர்வு எழுதிய மாணவி தீக்குளித்துத் தற்கொலை முயற்சி செய்ததால், தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஊரப்பாக்கம் அருகே உள்ள அய்யஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் கமலநாதன். இவர் சென்னை சேத்துப்பட்டு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக உள்ளார். இவரது மனைவி ஷீபா, மாடம்பாக்கம் அரசுப் பள்ளியில் ஆசிரியராக உள்ளார்.

இவர்களது மகள் அனுசுயா தந்தை பணி செய்யும் பள்ளியிலேயே கடந்த ஆண்டு பிளஸ் 2 படித்தார். சிறு வயதில் இருந்தே மருத்துவக் கனவுகளுடன் வளர்ந்த இவர், கடந்த 12ஆம் தேதி ஆவடியில் உள்ள தேர்வு மையத்தில் நீட் தேர்வையும் எழுதினார்.

பின்னர் ஆன்லைன் மூலம் அந்த விடைகளைச் சரிபார்க்கும்போது நீட் தேர்வில் மிகக் குறைந்த மதிப்பெண்களே கிடைக்கும் என்பது தெரியவந்தது. இதனால் மிகவும் மனம் உடைந்து காணப்பட்டார். இவரது தந்தையும் தாயும் வெளியில் சென்றிருந்த நேரத்தில் வீட்டில் தனியாக இருந்த அனுசுயா, உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். சுமார் 40 சதவீதம் அளவுக்கு தீக்காயமடைந்த அவர், செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மாணவியான அனுசுயாவை ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். நீட் தேர்வு அச்சத்தால் தொடர்ந்து மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வது, தற்கொலை முயற்சியில் ஈடுபடுவது போன்ற சம்பவங்கள் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

நீட் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளின் பயத்தைப் போக்கவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும் அவர்களுக்குத் தேவையான ஆலோசனையை விரைந்து கொடுக்க வேண்டும். அதே நேரத்தில், பெற்றோர் கவனமுடன் மாணவர்களைக் கண்காணிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x