Published : 15 Sep 2021 03:11 AM
Last Updated : 15 Sep 2021 03:11 AM

திண்டுக்கல் மாவட்டத்துக்கு இன்று வயது 36- தொழில் வளர்ச்சிக்கு உள்ளூர் அமைச்சர்கள் உதவுவார்களா?

திண்டுக்கல் நகரின் அடையாளமாகத் திகழும் மலைக்கோட்டை.

திண்டுக்கல்

இன்று 37-ம் ஆண்டில் அடி யெடுத்து வைக்கும் திண்டுக்கல் மாவட்டத்தில் தொழிற்சாலைகள் தொடங்க உள்ளூர் அமைச்சர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் ஏற்பட்டுள்ளது.

1985-ம் ஆண்டு செப்.15-ம் தேதி மதுரையில் இருந்து பிரிந்து உருவானது திண்டுக்கல் மாவட்டம். ஆன்மிகத்தலமான பழநி, சுற்றுலாத்தலமான கொடைக்கானல், தொழில் நகரமான திண்டுக்கல், காய்கறிகள் நகரமான ஒட்டன்சத்திரம், பூக்கள் அதிகம் விளையும் நிலக்கோட்டை, நூற்பாலைகள் அதிகம் உள்ள வேடசந்தூர் என திண்டுக்கல்லுக்கு பல்வேறு சிறப்புகள் உள்ளன. ஆனால், இந்த நகரங்களில் கட்டமைப்பு வசதிகளை அதிகரிப்பது, அடிப் படைத் தேவைகளை நிறைவேற்று வது என்பதில் மாவட்ட நிர்வாகம் பின்தங்கியே உள்ளது.

திண்டுக்கல்லில் சிறந்து விளங் கிய பூட்டு, இரும்புப் பெட்டி தயாரித்தல், தோல் தொழிற் சாலைகள் ஆகியன நசிந்து விட்டன. திண்டுக்கல் பூட்டுக்கு புவிசார் குறியீடு பெற்றும் சந்தைப்படுத்துதலில் சாதிக்க முடியாததால் வீழ்ச்சியில் உள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் புதிய தொழில்களும் வரவில்லை. இருக்கும் தொழில்களும் நசிந்துள்ளதால் வேலைவாய்ப்புகளைத் தேடி மக்கள் வெளிமாவட்டங்களுக்குச் செல்வது தொடர்கிறது. வேடசந்தூர் பகுதியில் சிப்காட், நிலக்கோட்டை பகுதியில் வாசனைத் திரவியத் தொழிற்சாலை அமைக்கும் திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

கொடைக்கானல், சிறுமலை உள்ளிட்ட மலைப் பிரதேசங்களில் சுற்றுலாவை மேம்படுத்த பல திட்டங்கள் அரசுக்குப் பரிந் துரைத்த போதிலும் எதுவும் நிறை வேற்றப்படவில்லை. இதனால் சுற்றுலா வளர்ச்சி மாவட்டத்தில் முற்றிலுமாக இல்லை. கொடைக் கானலின் பெரும்பிரச்சினையே கார் பார்க்கிங்தான். இதற்கான இடம் தேர்வு, திட்டங்கள் தயாரிப்பு என இருந்தபோதும், செயல்பாட்டுக்கான பணிகள் இதுவரை தொடங்கவில்லை. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் சுற்றுலா என்பது கொடைக்கானலுக்கு அதிகம் வரும் நடுத்தர மக்களுக்கு எந்த வகையிலும் பயனளிக்காத நிலை தான். கிராமப்புறங்களுக்கான காவிரி குடிநீர்த் திட்டப் பணிகள் விரிவாக்கம் ஆமை வேகத்தில் நடப்பதால் கோடைகாலத்தில் குடிநீர் பிரச்சினை தொடர்கிறது. மதுரை-நத்தம் இடையிலான பறக்கும் பாலப் பணி திண்டுக் கல் மாவட்டத்தில் இன்னும் தொடங்கவே இல்லை. இப் பணியை உடனே தொடங்கி விரைந்து முடித்தால் வளர்ச்சிக்கு வழியேற்படும்.

திண்டுக்கல் மாநகராட்சியின் நிதி நிலைமை மோசமாக உள் ளது. மாநகராட்சி எல்லை விரி வாக்கம் என்பது கானல்நீராக உள்ளது. போக்குவரத்து நெரி சலுக்குத் தீர்வு காண பேருந்து நிலையத்தை நகருக்கு வெளியே கொண்டுசெல்லும் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. சட்டப்பேரவைத் தொகுதிக்கு ஒரு அரசு கலைக்கல்லூரி என்பதும் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. கடந்த 36 ஆண்டுகளில் திண்டுக்கல் மாவட்டத்தின் வளர்ச்சிகள் போதுமானதாக இல்லை. புதிய தொழிற்சாலைகள் தொடங்க உள்ளூர் அமைச்சர்களான ஐ.பெரியசாமி, அர.சக்கரபாணி ஆகியோர் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மாவட்ட மக்களிடையே ஏற்பட்டுள் ளது. வளர்ச்சியில் திண்டுக்கல் மாவட்டம் இன்னும் செல்ல வேண்டிய தூரம் அதிகமாகும். இந்த எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்வதில் உள்ளூர் அமைச்சர்களின் பங்கு அதிகமுள்ளது என மக்கள் தெரிவிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x