Published : 14 Sep 2021 03:13 AM
Last Updated : 14 Sep 2021 03:13 AM

மீண்டும் காவல் ஆணையம்; காவல் நிலையங்களில் வரவேற்பாளர் நியமனம்- காவலர் இடர்ப்படி ரூ.1,000 ஆக உயர்த்தப்படும்: பேரவையில் 60 அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்

அனைத்து காவல் நிலையங்களிலும் வரவேற்பாளர்கள் நியமனம், காவலர்களுக்கு வழங்கப்படும் இடர்ப்படி ரூ.1,000 ஆக உயர்வு, மீண்டும் காவல் ஆணையம் அமைப்பு என்பது உட்பட 60 அறிவிப்புகளை சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.

சட்டப்பேரவையில் காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடந்தது. இதற்கு பதில் அளித்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின், காவல், தீயணைப்பு துறைகள் தொடர்பான 60 அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது, அவர் கூறியதாவது:

சவாலான, இணையவழி குற்றங்களை புலனாய்வு செய்ய, சென்னையில் மாநில இணையதள குற்றப்புலனாய்வு மையம் அமைக்கப்படும். மெரினா கடற்கரையில் நீரில் மூழ்கி இறக்கும் நிகழ்வுகளை தடுக்க, 12 மீனவர்களுடன் கூடிய மெரினா கடற்கரை உயிர்காப்பு பிரிவு தொடங்கப்படும். சென்னை தெற்கு, வடக்கு பிரிவுகளில் தலா ஒரு தீவிர குற்றவாளிகள் தடுப்பு பிரிவு ரூ.8.42 கோடியில் உருவாக்கப்படும். காவல் துறையினரின் முயற்சிகளில் மாணவர்களை ஈடுபடுத்தும் ‘சிற்பி’ பிரிவு, சென்னையில் 100 பள்ளிகளில் ஏற்படுத்தப்படும். சென்னையில் கூட்டமான இடங்கள், நீண்டதூர சாலைகளை கண்காணிக்க ரூ.3.60 கோடியில் நடமாடும் ட்ரோன் காவல் அலகு ஏற்படுத்தப்படும்.

தமிழகத்தில் அனைத்து காவல் நிலையங்களிலும் வரவேற்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள். இதற்காக பல ஆண்டுகளாக கருணைஅடிப்படையில் காத்திருக்கும் 1,132 பேருக்கு பணி நியமனம்வழங்கப்படும். பொதுமக்கள் உடனான தொடர்பு திறனை மேம்படுத்த 1.20 லட்சம் காவலர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். மீனவ இளைஞர்கள் இந்திய கடற்படையில் ஒப்பந்த அடிப்படையில் சேர, கடலோர காவல்படை குழுமம் மூலம் 6 மாத பயிற்சி வழங்கப்படும். கடலோர காவல் படையினருடன் இணைந்து பணியாற்ற 1,000 மீனவஇளைஞர்கள் ஊர்க்காவல் படையினராக பணியமர்த்தப்படுவர்.

காவலர்களின் கோரிக்கைகள் மற்றும் தேவைகளை அறிவதற்காக காவல் துறை ஆணையம் விரைவில்அமைக்கப்படும். சுற்றுலா தலங்களில் மக்களுக்கு பாதுகாப்பு வழங்க சுற்றுலா காவல் துறை அமைக்கப்படும். நீட் தேர்வு, மதுக்கடைகளுக்கு எதிரான போராட்டம் நடத்தியவர்கள் மீது முந்தைய அரசால் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்ப பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

காவலர்களுக்கு வழங்கப்படும் இடர்ப்படி, ரூ.800-ல் இருந்து ரூ.1,000 ஆக உயர்த்தப்படும். 2-ம்நிலை காவலர்கள் முதல் தலைமைக் காவலர் வரை வாரம் ஒரு நாள் ஓய்வு அளிக்கப்படும். காவலர்கள்போல, அவர்களது துணைவியருக்கும் ஆண்டுதோறும் அரசு மருத்துவமனைகளில் மருத்துவப் பரிசோதனை வசதி அளிக்கப்படும்.இதுதவிர தடயவியல், தீயணைப்பு உள்ளிட்ட துறைகளுக்கான அறிவிப்புகள் உட்பட 60 அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x