Last Updated : 24 Feb, 2016 08:11 AM

 

Published : 24 Feb 2016 08:11 AM
Last Updated : 24 Feb 2016 08:11 AM

தொண்டர்களாக மாறிய ரசிகர்கள்: எதிர்நீச்சல் போட்டு எதிர்க்கட்சித் தலைவரான விஜயகாந்த்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் என்றாலே அவரது கலகலப்பான பேட்டிகளும், நக்கலான பேச்சும்தான் இன்றைக்கு பலரது நினைவுக்கு வரும். ஆனால், திரைத்துறையில் தொடங்கி, பல எதிர்ப்புகளை சந்தித்து, இன்றைக்கு எதிர்க்கட்சித் தலைவரானது வரை அவர் கடந்து வந்த பாதையை இன்றைய தலைமுறையினர் அறிந்திருக்க வாய்ப் பில்லை. விஜயராஜாக இருந்து விஜய காந்தாக மாறிய அவரது வாழ்க்கைப் பயணம்:

மதுரை திருமங்கலத்தில் 1952-ம் ஆண்டு ஆகஸ்ட் 25-ல் பிறந்த விஜயகாந்த், திரைத்துறை மீது ஏற்பட்ட ஈர்ப்பால் 10-ம் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டார். அப்பாவின் அரிசி மில்லை கவனிக்கத் தொடங்கினார். 1965-ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட் டத்தில் பங்கேற்றார். இந்தி எதிர்ப்பு கொள்கையை காப்பாற்றுவதற்காக வாய்ப்பு கிடைத்தும் இன்று வரை இந்திப் படங்களில் அவர் நடிக்கவில்லை என்கின்றனர் அவரது ரசிகர்கள்.

சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற வேட்கையுடன் 1978-ல் சென்னை வந்தார். எம்ஜிஆரின் உதவும் குணம், ரஜினியின் மேனரிசம் இரண்டையும் பிடித்துக்கொண்டு, ‘இனிக்கும் இளமை’ படத்தின் மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்ததால் அப்போதே ‘விஜயகாந்த் தென்னிந்திய ரசிகர் மன்றம்’ உருவாக்கப்பட்டது. இன்றைய தேமுதிகவுக்கான விதை அதுதான். 1980-ல் ‘அகில இந்திய தலைமை ரசிகர் மன்றம்’ என்று பெயர் மாறியது.

பின்னர், 1982-ல், ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா’ என்ற லட்சிய முழக்கத்துடன் ‘தமிழ்நாடு விஜயகாந்த் தலைமை ரசிகர் மன்றம்’ என மன்றத்தின் பெயர் மாற்றப்பட்டது. அப்போது முதலே தனது ரசிகர் மன்றம் மூலம் பல நலத்திட்ட உதவிகளை வழங்க ஆரம்பித்தார்.

1984-ம் ஆண்டில் தனது ரசிகர் மன்றத்தின் சார்பில் முதல் போராட்டத்தை நடத்தினார் விஜய காந்த். அது, இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு வேண்டும் என்பதை வலியுறுத்திய உண்ணா விரதப் போராட்டம். 1989-ல் ரசிகர் மன்றம் சார்பில் ஈரோட்டில் இலவச மருத்துவமனையை திறந்துவைத்தார். இதையடுத்து சென்னை சாலிகிராமத் திலும் ஒரு இலவச மருத்துவமனை திறக் கப்பட்டது.

1990-ம் ஆண்டு தொழிலதிபர் எல்.சி.கண்ணையா அம்சவேணி தம்பதியின் மகளான பிரேமலதாவை விஜயகாந்த் திருமணம் செய்துகொண் டார். இவர்களது திருமணத்தை அன்றைக்கு முதல்வராக இருந்த கரு ணாநிதிதான் நடத்திவைத்தார்.

1991-ம் ஆண்டு வெளியான விஜய காந்தின் 100-வது படமான ‘கேப்டன் பிரபாகரன்’ மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்தப் படம்தான் அவருக்கு ‘கேப்டன்’ என்ற அடைமொழியைத் தந்தது. இலங்கைத் தமிழர் பிரச்சி னைக்கு தீர்வு காணும் வரை பிறந்தநாள் கொண்டாட மாட்டேன் என்று 1994-ல் அறிவித்த விஜயகாந்த், இன்றுவரை அதை பின்பற்றுகிறார்.

1999 முதல் 2004 வரை தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவராக இருந்த விஜய காந்த், நடிகர் சங்க கடனை அடைத்தார். 2001-ல் சிறந்த இந்தியக் குடிமகன் விருதை விஜயகாந்துக்கு ஐ.நா. மனித உரிமைக் கமிஷனின் அப்போதைய தலைவர் பி.என்.பகவதி டெல்லியில் வழங்கினார்.

தனது ரசிகர் மன்றத்துக்கான கருப்பு, சிவப்பு நிறத்தில் மத்தியில் மஞ்சள் நிற தீபம் கொண்ட கொடியை 2002-ல் அறிமுகம் செய்தார். அதுதான் இன்றைக்கு தேமுதிக கொடி யாகவும் தொடர்கிறது. 1996 மற்றும் 2001 உள்ளாட்சித் தேர்தல்களில் விஜயகாந்த் ரசிகர் மன்ற நிர்வாகிகள் பலர் போட்டியிட்டனர். 500-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றியும் பெற்றனர். இதுவும் கட்சி தொடங்கும் நிலைக்கு விஜயகாந்தை தள்ளியது.

நீண்ட ஆலோசனைக்குப் பிறகு, 2005-ம் ஆண்டு ஆகஸ்ட்டில் தேமுதி கவை மதுரையில் முறைப்படி தொடங் கினார். ரசிகர் மன்ற நிர்வாகிகள், கட்சி நிர்வாகிகளாகினர். ரசிகர்கள் தீவிர தொண்டர்களாயினர்.

சென்னை கோயம்பேட்டில் இருந்த அவரது திருமண மண்டபம் மேம்பால பணிக்காக 2006- நவம்பரில் இடிக்கப்பட்டதற்கு அன்றைய திமுக அரசுதான் காரணம் என்று கூறி கடு மையாக விமர்சித்தார் விஜய காந்த். 2006 தேர்தலில் திமுக, அதிமுக என்ற இரு பெரும் கட்சிகளை எதிர்த்து தனித்துப் போட்டியிட்ட தேமுதிக, 8 சதவீத வாக்கு வங்கியைப் பெற்றது. விரு தாச்சலம் எம்எல்ஏ ஆனார் விஜயகாந்த்.

2011 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று நோக்கில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தார். 41 தொகுதிகளில் போட்டி யிட்டு 29 தொகுதிகளை கைப்பற்றியது தேமுதிக. விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவராக உருவெடுத்தார்.

2014 மக்களவைத் தேர்தலில் பாஜக வுடன் கூட்டணி அமைத்த தேமுதிக, போட்டியிட்ட எந்த இடத்திலும் வெற்றி பெறவில்லை. இப்போது 2016 தேர்தலில் அதிமுக தவிர்த்து மற்ற கட்சிகளின் பலத்த எதிர்பார்ப்பாக தேமு திக மாறியுள்ளது. திமுக, பாஜக, மக்கள் நலக் கூட்டணி என பல திசை களில் இருந்தும் சிவப்புக் கம்பளம் விரித்து காத்திருக்கின்றனர். ஆனால், விஜயகாந்தோ திமுகவுக்கு தலையை யும், பாஜக, மக்கள் நலக்கூட்டணிக்கு வாலையும் காட்டி வருகிறார்.

மைத்துனராகும் முன்பே..

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக 1987-ம் ஆண்டில் ரசிகர் மன்றம் சார்பில் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினார் விஜயகாந்த். அப்போது சென்னையில் உண்ணாவிரதம் இருந்த விஜயகாந்தை, சென்னை பச்சையப்பா கல்லூரியின் மாணவர் அமைப்பில் பதவி வகித்த எல்.கே.சுதீஷ் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அடுத்த 3 ஆண்டுகளில் அவரே விஜயகாந்தின் மைத்துனரானார். பின்னர் தேமுதிக இளைஞரணி தலைவராகவும் ஆக்கப்பட்டார்.

1990-ல் விஜயகாந்தை திருமணம் செய்தாலும் 2004-ல் காஞ்சிபுரத்தில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில்தான் முதன்முதலாக மைக் பிடித்து பேசினார் பிரேமலதா. அதன்பிறகே அரசியலில் ஈடுபாடு காட்டத் தொடங்கினார்.

விஜயகாந்தின் மகன்கள் சண்முக பாண்டியன், விஜய் பிரபாகரன் இரு வருமே சமூக சேவைகளில் ஆர்வம் கொண்டவர்கள். அமைந்தகரை கூவம் ஆற்றோரம் வசிக்கும் ஏராளமான ஏழை சிறுவர்களுக்கு இலவசக் கல்வி வழங்குவது போன்ற பல பணிகளை அவர்கள் செய்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x