Last Updated : 08 Sep, 2021 06:57 PM

 

Published : 08 Sep 2021 06:57 PM
Last Updated : 08 Sep 2021 06:57 PM

ஆசிரியர் இடமாறுதல் முறைகேடு; லஞ்ச ஒழிப்பு விசாரணைக்கு உத்தரவிடக்கோரி வழக்கு- தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

தமிழகத்தில் 2020- 2021ஆம் ஆண்டில் ஆசிரியர் இடமாற்றத்தில் நடைபெற்ற முறைகேடு குறித்து லஞ்ச ஒழிப்பு விசாரணைக்கு உத்தரவிடக்கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:

’’தமிழகத்தில் ஆசிரியர்கள் கலந்தாய்வு மூலம் இடமாற்றம் செய்யப்படுகின்றனர். இதுதவிர நிர்வாகக் காரணங்கள் அடிப்படையிலும் ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்படுகின்றனர். நிர்வாக இடமாறுதலில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுகின்றன. ஆசிரியர்கள் இடமாற்றம் தொடர்பாக உயர் நீதிமன்றம் 2019-ல் வழிகாட்டுதல்களைப் பிறப்பித்துள்ளது.

2020- 2021ஆம் ஆண்டில் ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு நடைபெறவில்லை. ஆனால் நிர்வாக அடிப்படையில் ஆசிரியர்கள் இடமாற்றம் நடைபெற்றது. லட்சக்கணக்கில் பணம் வாங்கிக் கொண்டு ஆசிரியர்களுக்கு இடமாறுதல் வழங்கப்பட்டுள்ளது. எனவே தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் நிர்வாக அடிப்படையில் இடமாறுதல் பெற்ற ஆசிரியர்கள் குறித்தும், அதில் நடைபெற்றுள்ள முறைகேடு குறித்தும் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’’.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எம்.துரைசாமி, கே.முரளிசங்கர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், 2020- 2021 ஆண்டில் ஆசிரியர் இடமாற்றக் கலந்தாய்வு நடைபெறவில்லை என்றார்.

இதையடுத்து மனு தொடர்பாக உள்துறைச் செயலர், பள்ளிக் கல்வித்துறைச் செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு, அடுத்த விசாரணையை அக். 27-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x