Published : 08 Sep 2021 01:57 PM
Last Updated : 08 Sep 2021 01:57 PM

விநாயகர் சதுர்த்தி; அரசின் கட்டுப்பாடுகளுக்குத் தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு 

பொது இடங்களில், விநாயகர் சிலைகளை வைப்பதற்கும், ஊர்வலம் நடத்தவும் தடை விதித்து அரசு பிறப்பித்துள்ள உத்தரவில் தலையிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

சென்னையைச் சேர்ந்த இல. கணபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த பொதுநல வழக்கில், கடந்த 30ஆம் தேதி தமிழக அரசு விநாயகர் சிலைகளைப் பொது இடங்களில் வைத்து வழிபடுவதற்கும், ஊர்வலமாக எடுத்துச் செல்வதற்கும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளதை சுட்டிக் காட்டி அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, விநாயகர் சிலைகளைப் பொது இடங்களில் வைத்து வழிபடவும், ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், குறைந்தபட்சம் ஐந்து பேரையாவது அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, மத உரிமைகளைப் பின்பற்ற வாழ்வாதார உரிமை முக்கியமானது என்றும், பொதுநலன் கருதியே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும், அரசு பிறப்பித்துள்ள தடை உத்தரவில், நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் கூறி வழக்கை முடித்து வைத்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x