Last Updated : 07 Sep, 2021 03:13 AM

 

Published : 07 Sep 2021 03:13 AM
Last Updated : 07 Sep 2021 03:13 AM

அருங்காட்சியகம் ஆகுமா நாட்டிய மேதை கௌரி அம்மாள் வீடு?

கெளரி அம்மாள்

பரதநாட்டியத்தின் பெருமையை உலக நாடுகளுக்கு கொண்டுசேர்த்த தஞ்சாவூர் பாலசரஸ்வதி, கலாக்ஷேத்ராவை உண்டாக்கிய ருக்மிணிதேவி அருண்டேல் ஆகியோருக்கு பரத நாட்டியம் கற்பித்தவர் நாட்டிய மேதை மயிலாப்பூர் கௌரி அம்மாள்.

ஆலயங்களில் உழவாரப் பணிசெய்வது தொடங்கி, இறைவனுக்கு முன்பாக தினம்தினம் பாடி, நடனம் ஆடும் பெண்கள் `தேவரடியார்கள்’ என்று அழைக்கப்பட்டனர். இத்திருப்பணியில் ஈடுபட்ட பெண்களுக்கு ராஜராஜ சோழன் உள்ளிட்ட மன்னர்கள் நிலம், பொன், பொருள்களை வழங்கியதற்கான கல்வெட்டுகள், சாசனங்கள் வரலாற்றின் பக்கங்கள் நெடுகிலும் காணக்கிடைக்கின்றன.

இறைவனுக்கு அடிமையாகக் கலையை அர்ப்பணித்த தேவரடியார்களின் வாழ்க்கை முறை காலப்போக்கில் சிலரால் மாறியது. ஆல யங்களில் தேவரடியார் நடனம் ஆடுவதை தடை செய்யும் சட்டம் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியால் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்தால் தேவரடியார்களின் வாழ்க்கை தடுமாறியது. சமூகத்தில் பெரும் செல்வாக்கோடு வாழ்ந்த தேவரடியார்கள் பலரை ஆலய நிர்வாகங்களே காப்பாற்றின.

ஆலயத் திருப்பணிகளை பாரம்பரியமாக செய்துவரும் குடும்பத்தில் பிறந்த கௌரி அம்மாள், பரதநாட்டியத்தில் அந்நாளில் பெரும் புகழோடு விளங்கிய தனது தாய்துரைக்கண்ணுவிடம் பரதநாட்டியம் கற்றுக்கொண்டார். தன் தாயின்வழியில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் திருப்பணி செய்துவந்தார். ஆலயத்தில் நடனம் ஆடுவதைதடைசெய்யும் சட்டம் வந்த பிறகும், கபாலீஸ்வரர் ஆலயத்துக்கு சொந்தமான வீட்டில்தான் கௌரி அம்மாள் வாழ்ந்துவந்தார். அவரது மறைவுக்குப் பிறகு அந்த வீடு பூட்டியே இருந்தது.

இந்த நிலையில், மயிலாப்பூரில் கௌரி அம்மாள் வாழ்ந்த வீட்டை புதுப்பித்து, அருங்காட்சியகமாக மாற்ற வேண்டும் என வலியுறுத்தி, பரதநாட்டியக் கலைஞரும் கலை, இலக்கிய விமர்சகருமான லஷ்மி விஸ்வநாதன், ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் சமீபத்தில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார்.

அதில், ‘கௌரி அம்மாளின் அந்நாளைய புகைப்படங்கள், 20-ம் நூற்றாண்டின் இணையற்ற நாட்டிய மேதைகளின் ஒளிப்படங்களை அங்கு வைக்க வேண்டும். அந்தநாட்டிய மேதை குறித்த தகவல்கள், விருதுகள், முக்கியத் தருணங்களை வெளிக்கொணரும் செய்திகளை உள்ளடக்கிய நிரந்தரக் கண்காட்சி அரங்கமாகவும், கௌரிஅம்மாளின் நினைவு இல்லமாகவும் அவர் வாழ்ந்த வீட்டை மாற்றவேண்டும்.

நம் நாட்டில் அடுத்த தலைமுறையைச் சேர்ந்தவர்களும், உலகம் முழுவதும் இருந்து வரும் கலை ரசிகர்களும் அந்த நாட்டிய மேதை பற்றிய வரலாற்றை அறிய உதவும்களஞ்சியமாக அவர் வாழ்ந்த வீட்டை மாற்ற வேண்டும்’ என்றுகலா ரசிகர்களுக்கும், தன்னார்வலர்களுக்கும், அரசுக்கும் கோரிக்கை விடுக்கும் வகையில் லஷ்மி விஸ்வநாதன் எழுதியிருந்தார்.

இதைத் தொடர்ந்து, கௌரிஅம்மாள் வாழ்ந்த வீட்டை கபாலீஸ்வரர் கோயில் நிர்வாகம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருப்ப தாக ஆலய நிர்வாகத்தினர் தெரி வித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x