Published : 16 Jun 2014 09:53 AM
Last Updated : 16 Jun 2014 09:53 AM

திண்டிவனம் அருகே சென்னை பெண் டாக்டர் படுகொலை

திண்டிவனம் அருகே கொல்லப்பட்ட பெண் சென்னையை சேர்ந்த டாக்டர் என அடையாளம் தெரிந்தது.

சென்னை முகப்பேர் ஏரிக்கரை பகுதியில் வசிப்பவர் ஹரிபாபு. இவர் ஹைதராபாத்தில் பொறியாளராக பணியாற்றுகிறார். இவரது மனைவி மல்லிகா(58). இவர் ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் உள்ள கெயில் மருத்துவமனையில் தலைமை டாக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

மல்லிகா தனது இளைய மகளான டாக்டர் ரோகினி பிரியாவுடன் (26) முகப்பேரில் வசித்து வந்தார். சென்னை அடுத்த மிண்ட் பகுதியில் உள்ள இடத்தை விற்பனை செய்வதற்காக கடந்த 12ம் தேதியன்று மல்லிகா காரில் திருப்போரூர் சென்றுள்ளார். காரை கார்த்திக் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். கார்த்திக் தோழி சத்யாவும் உடன் சென்றுள்ளார். அன்று மாலை 4 மணி வரை டாக்டர் மல்லிகா தனது மகள் ரோகினியிடம் செல்போனில் தொடர்பில் இருந்துள்ளார். அதன்பிறகு மல்லிகாவின் செல்போன் இணைப்பு ரோகினிக்கு கிடைக்கவில்லை.

சந்தேகமடைந்த ரோகினி நொளம்பூர் போலீஸில் புகார் அளித்தார். இது தொடர்பாக போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் திண்டிவனம் அருகே உள்ள மயிலம் காட்டுப்பகுதியில் நேற்றுமுன்தினம் மாலை பெண் ஒருவர் இறந்து கிடந்தார். தகவல் அறிந்ததும் மயிலம் போலீஸார் விரைந்து சென்று உடலை கைப்பற்றினர்.

இதுதொடர்பாக நொளம்பூர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸாரின் தொடர் விசாரணையில் இறந்து கிடந்தது டாக்டர் மல்லிகா என்பதும் அவர் கொலை செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது. அவருடன் சென்ற டிரைவர் கார்த்திக், அவரது தோழி சத்யா ஆகியோர் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை

. இந்த கொலை தொடர்பாக மயிலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையில் போலீஸார் ஜனார்த்தனன், செந்தில் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x