Published : 21 Feb 2016 10:21 AM
Last Updated : 21 Feb 2016 10:21 AM

திருச்செந்தூரில் நாளை தேரோட்டம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித்திருவிழாவில் நேற்று சுவாமி சண்முகப்பெருமான் பச்சை சாத்தி எழுந்தருளினார். நாளை தேரோட்டம் நடைபெறுகிறது.

திருச்செந்தூரில் மாசித்திருவிழா கடந்த 13-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினந்தோறும் காலை, மாலை வேளைகளில் சுவாமி, அம்மன் தனித்தனி வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

நேற்றுமுன்தினம் அதிகாலை 5 மணியளவில் சண்முகபெருமானின் உருகு சட்டசேவை மற்றும் சுவாமி சிவப்பு மலர்கள், சிவப்பு ஆடையால் அலங்கரிக்கப்பட்டு, சிவப்பு சாத்தி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நேற்று காலை பெரிய வெள்ளிச் சப்பரத்தில் வெண்ணிற மலர்கள், வெண் ணிற ஆடை அணிந்து, வெள்ளைச் சாத்தி வீதி வலம் வந்தார். மேலக்கோயிலை சுவாமி அடைந்ததும், அங்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. பகல் 11 மணிக்கு பச்சைக் கடைசல் சப்பரத்தில் சுவாமி பச்சை சாத்தி எழுந்தருளி வீதி உலா வந்தார். அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு சுவாமிக்கு துளசி மாலைகளை காணிக்கை செலுத்தினர். தொடர்ந்து சுவாமி திருக்கோயில் சேர்ந்தார்.

நாளை காலை 6.30 மணிக்கு மேல் தேரோட்டம் தொடங்குகிறது. பிள்ளையார் ரதம், சுவாமி தேர், அம்மன் தேர்கள் திருவீதி வலம் வந்து, மாலையில் நிலையம் சேர்கிறது. வரும் 23-ம் தேதி இரவு தெப்பத்திருவிழா நடைபெறுகிறது. 24-ம் தேதி திருவிழா நிறைவு பெறுகிறது.

ஏற்பாடுகளை கோயில் தக்கார் ப.தா.கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் தா.வரதராஜன் மற்றும் திருக் கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x