Published : 04 Sep 2021 03:15 AM
Last Updated : 04 Sep 2021 03:15 AM

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பயிற்சி மருத்துவர்களுக்கு கூடுதல் பணியா?- கண்காணிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பயிற்சி மருத்துவர்களுக்கு கூடுதல் பணி நேரம் ஒதுக்கப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க, மருத்துவக் கல்வி இயக்குநருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கப் பொதுச்செயலாளர் மருத்துவர் ரவீந்திரநாத் வழக்கு தொடர்ந்தார்.

அவர் தாக்கல் செய்த மனுவில், “தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மேற்படிப்பு மாணவர்களும் பயிற்சி மருத்துவர்களும் 8 மணி நேரத்துக்கும் மேல் பணியாற்ற நிர்பந்திக்கப்படுகிறார்கள். பணிச்சுமை காரணமாக பயிற்சி மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் அபாயம் உள்ளது. பயிற்சி மருத்துவர்களுக்கு 8 மணி நேர பணியை நிர்ணயித்து 2015-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பை உறுதியாக செயல்படுத்த வேண்டும்" என்று கோரப்பட்டிருந்தது.

இவ்வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் கொண்ட அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு வழக்கறிஞர் வாதிடும்போது, “கடந்த பிப்ரவரி மாதத்துக்கு பின் கூடுதல் பணி நேரம் ஒதுக்கப்படுவதாக எந்த புகாரும் இல்லை. கூடுதல் பணி நேரம் ஒதுக்கினால் அதுகுறித்து புகார் அளிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது" என்றார்.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிகளில் மேற்படிப்பு மாணவர்களுக்கும் பயிற்சி மருத்துவர்களுக்கும் கூடுதல் பணி நேரம் ஒதுக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும் என்று மருத்துவ கல்வி இயக்குநருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x