Published : 02 Sep 2021 03:13 AM
Last Updated : 02 Sep 2021 03:13 AM

உலக வங்கி உதவியுடன் ‘ரைட்ஸ்’ திட்டம் செயல்படுத்தப்படும்; மாற்றுத் திறனாளிகள் நலனுக்கு ரூ.1,702 கோடியில் திட்டங்கள்- சட்டப்பேரவையில் அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு

சென்னை

மாற்றுத் திறனாளிகள் நலத் துறையால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மாற்றுத் திறனாளிகள் அனைவரையும் சென்றடையும் வகையிலும், துறையின் நடவடிக்கைகளை வட்டார மற்றும் உள்ளூர் அளவில் விரிவுபடுத்தும் நோக்கிலும் உலகிலே முதன்முறையாக உலக வங்கி நிதியுதவியுடன் ‘ரைட்ஸ்’ (RIGHTS) திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். 6 ஆண்டுகளில் ரூ.1,702 கோடியில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்தார்.

மாற்றுத் திறனாளிகள் நலத்துறையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக கவனித்து வருகிறார். இந்நிலையில் சட்டப்பேரவையில் வீட்டுவசதி, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட துறைகளின் மீதான உறுப்பினர்களின் விவாதத்துக்கு பதில் அளித்து, சமூகநலத் துறை அமைச்சர் கீதா ஜீவன் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:

மாற்றுத் திறனாளிகள் சுயவிருப்பத்தின் அடிப்படையில் அவர்களுக்கேற்றவாறு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட உதவி உபகரணங்களை பெற்றுக் கொள்ள நிலையான நிதியுதவியை அரசு வழங்கும். மாற்றுத் திறனாளிபராமரிப்பு உதவித் தொகை கோரிவிண்ணப்பித்து காத்திருப்போர் பட்டியலிலுள்ள அனைவருக்கும் நடப்பாண்டு முதல் மாதாந்திர உதவித் தொகையை வழங்குவதற்கான நிதி ரூ.404 கோடியே 64 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

உதவி உபகரணங்கள் கோரி விண்ணப்பித்து காத்திருப்போர் பட்டியலில் உள்ள அனைவருக்கும் உதவி உபகரணங்கள் வழங்க 2021-22-ம் ஆண்டு்க்கு ரூ.62 கோடியே 50 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

சம வாய்ப்புக் கொள்கை

அனைத்து அரசுத் துறைகள் மற்றும் 20 பேருக்கு மேல் பணியாற்றும் தனியார் நிறுவனங்களில் மாற்றுத் திறனாளிகள் பணிபுரிய தகுதியான பணியிடங்களைக் கண்டறிதல் மற்றும் அனைத்து இடங்களிலும் தடையற்ற சூழலை உருவாக்க ‘சம வாய்ப்புக் கொள்கை’ உருவாக்கப்படும்.

மத்திய அரசின் ‘சங்கல்ப்’ திட்டத்தில் பெறப்பட்ட நிதியுதவி மூலம் வேலைவாய்ப்பு மற்றும்வாழ்வாதாரம் மையம் உருவாக்கப்பட்டு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் வழியாக வேலைவாய்ப்பு நாடும் மாற்றுத்திறனாளிகளுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டு அவர்களுக்கான வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும்.

மாற்றுத் திறனாளிகளுக்காக பிரத்யேக தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டதுடன், அவர்களது இருப்பிடங்களுக்கே சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதுவரை 1,74,369 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

துறையால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்தும் மாற்றுத் திறனாளிகள் அனைவரையும் சென்றடையும் வகையில் துறையின் நடவடிக்கைகளை வட்டார மற்றும் உள்ளூர் அளவில் விரிவுபடுத்தும் நோக்கில் உலகிலேயே முதன்முறையாக உலக வங்கி நிதியுதவியுடன் ‘ரைட்ஸ்’ (RIGHTS) திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இத்திட்டம் 6 ஆண்டுகளில் ரூ.1,702 கோடியில் செயல் படுத்தப்படும்.

இவ்வாறு அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x