Published : 27 Feb 2016 09:39 AM
Last Updated : 27 Feb 2016 09:39 AM
ஸ்ரீரங்கம் ரங்கநாதர், சமயபுரம் மாரியம்மன் கோயில்களில் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா நேற்று வழிபாடு செய்தார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா வின் தோழி சசிகலா நேற்று காலை விமானம் மூலம் திருச்சி வந்தார். அங்கிருந்து காரில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்குச் சென்ற அவரை, கோயில் இணை ஆணை யர் ஜெயராமன், அறங்காவலர் கஸ்தூரி, தலைமை அர்ச்சகர் நந்து பட்டர் உள்ளிட்டோர் வரவேற்று அழைத்துச் சென்றனர்.
அங்கு கருடாழ்வார் சன்னதியில் வழிபட்ட சசிகலா, பின்னர் ஆரிய படாள் வாசல் வழியாகச் சென்று ரங்கநாதரை வழிபட்டார். அப்போது, அங்கு முதல்வர் ஜெயலலிதா பெய ரில் சிறப்பு வழிபாடு நடத்தப் பட்டதாகக் கூறப்படுகிறது. அதன் பிறகு பேட்டரி காரில் சென்று தாயார் சன்னதி, சக்கரத்தாழ்வார் சன்னதி, ராமானுஜர் சன்னதிகளில் சசிகலா வழிபாடு செய்தார்.
பின்னர் கிழக்கு கோபுரம் வழி யாக வெளியே சென்ற அவர், வடக்கு வாசலில் உள்ள ஜீயர் மடத்துக்குச் சென்று, ஸ்ரீரங்கம் ரங்கநாராயண ஜீயரைச் சந்தித்து ஆசி பெற்றார். அதைத்தொடர்ந்து சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கும் சென்று சிறப்பு வழிபாடு செய்தார். சசிகலாவின் வருகை ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், மதுரை மீனாட்சியம்மன், பழநி தண்டாயுதபாணி சுவாமி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் உட்பட தமிழகத்திலுள்ள முக்கிய கோயில்களுக்குச் சென்று சசிகலா வழிபாடு நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT