Published : 30 Aug 2021 03:15 AM
Last Updated : 30 Aug 2021 03:15 AM

தென்மேற்கு பருவமழை தீவிரம்: தென்காசி அணைகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு

தென்காசி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை தென்மேற்கு பருவமழை பெய்யும். இந்த ஆண்டில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தென்மேற்கு பருவமழை ஏமாற்றம் அளித்தது. பெரும்பாலான நாட்களில் வறண்ட வானிலை நிலவியதுடன், வெப்பமும் அதிகரித்து காணப்பட்டது.

இந்நிலையில், ஆகஸ்ட் இறுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் குளிர்ந்த காற்று வீசுகிறது.

நேற்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் அடவிநயினார் அணையில் 30 மி.மீ. மழை பதிவானது. ஆய்க்குடியில் 18 மி.மீ., குண்டாறு அணையில் 10, கருப்பாநதி அணையில் 9, தென்காசியில் 7.60, கடனாநதி அணை, சங்கரன்கோவிலில் தலா 5, செங்கோட்டையில் 3, சிவகிரியில் 1 மி.மீ. மழை பதிவானது.

மலைப்பகுதியில் பெய்த மழையால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. கரோனா பரவல் காரணமாக அருவிகளில் குளிக்கத் தடை நீடிக்கிறது. இதனால் குற்றாலம் வெறிச்சோடி காணப்பட்டது.

அணைகள் நிலவரம்

அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. குண்டாறு அணை தொடர்ந்து முழு கொள்ளளவில் உள்ளது. கடனாநதி அணை நீர்மட்டம் 66.80 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 65 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 61.35 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 121 அடியாகவும் இருந்தது.

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் 13 மி.மீ., சேர்வலாறில் 6, கொடுமுடியாறு அணையில் 5 , சேரன்மகாதேவியில் 1 மி.மீ. மழை பதிவானது.

பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 2,217 கனஅடி நீர் வந்தது. 1,205 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. அணை நீர்மட்டம் 88 அடியாக இருந்தது.

சேர்வலாறு அணையில் நீர்மட்டம் 94.68 அடியாகவும், மணிமுத்தாறு அணையில் நீர்மட்டம் 64.70 அடியாகவும், வடக்கு பச்சையாறு அணையில் நீர்மட்டம் 16.65 அடியாகவும், நம்பியாறு அணையில் நீர்மட்டம் 11.15 அடியாகவும், கொடுமுடியாறு அணையில் நீர்மட்டம் 27.75 அடியாகவும் இருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x