Published : 28 Aug 2021 04:31 PM
Last Updated : 28 Aug 2021 04:31 PM

'விவசாயிகளுடன் ஒரு நாள்' - புதிய திட்டம்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு

அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்: கோப்புப்படம்

சென்னை

வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், 'விவசாயிகளுடன் ஒரு நாள்' எனும் புதிய திட்டத்தை அறிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் கடந்த 13-ம் தேதி பொது பட்ஜெட்டும், 14-ம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, இரு பட்ஜெட்டுகள் மீதான பொது விவாதம் மற்றும் பதிலுரை நடைபெற்றது. இதன்பின், ஒவ்வொரு துறை வாரியான மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இன்று (ஆக.28) வேளாண் மற்றும் உழவர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் சட்டப்பேரவையில் நடைபெற்றது. இதில், அத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், கரூர், நாகப்பட்டினம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் ரூ.30 கோடி மதிப்பீட்டில் அரசு வேளாண் கல்லூரிகள், ஆதிதிராவிட பழங்குடியின விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் ஆழ்துளை அல்லது குழாய்க்கிணறுகள் அமைத்து, மின்மோட்டாருடன் நுண்ணீர்ப்பாசன வசதி அமைத்துத் தருவதற்காக, ரூ.12 கோடி செலவிடப்படும் என்பது உள்ளிட்ட 25 திட்டங்களை அறிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், முதல்வர் ஸ்டாலின் அனுமதியுடன் 'விவசாயிகளுடன் ஒரு நாள்' எனும் புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்தார். அதன்படி, ஒவ்வொரு சட்டப்பேரவை உறுப்பினரும் தங்கள் தொகுதியில் உள்ள கிராமத்துக்குச் சென்று விவசாயிகள் கருத்தைக் கேட்க வேண்டும் எனவும், விவசாயிகள் கருத்துகளைக் கேட்டு அதைத் தீர ஆராய்ந்து அவர்களுக்குத் தீர்வு காண வேண்டும் என்றும் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x