Published : 28 Aug 2021 03:13 AM
Last Updated : 28 Aug 2021 03:13 AM

விவசாயி தாக்கப்பட்ட வழக்கில் வி.ஏ.ஓ, கிராம உதவியாளர் கைது :

கோவை மாவட்டம் அன்னூர் ஒட்டர்பாளையத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் விவசாயி கோபால்சாமி தாக்கப்பட்ட விவகாரத்தில், வி.ஏ.ஓ கலைச்செல்வி, கிராம உதவியாளர் முத்துசாமி ஆகியோரை கைது செய்ய வேண்டும், இருவரையும் பணி நீக்கம் செய்ய வேண்டும், கோபால்சாமி மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, விவசாய அமைப்புகள் சார்பில் தொடர் போராட்டம் நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில், தன்னை தாக்கிய முத்துசாமி, உடந்தையாக இருந்த வி.ஏ.ஓ கலைச்செல்வி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோபால்சாமி அளித்த புகாரின் பேரில், அன்னூர் காவல் ஆய்வாளர் நித்யா விசாரணை நடத்தி, நேற்று முன்தினம் கலைச்செல்வி, முத்துசாமி ஆகியோரை கைது செய்தார்.

அன்னூர் போலீஸார் கூறும்போது, ‘‘தகாத வார்த்தையில் திட்டுதல், தாக்குதல், தாக்க தூண்டுதல் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து இருவரும் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டனர். கோபால்சாமி தாக்கப்பட்டதை மறைத்து, அவரது காலில் முத்துசாமி விழுந்து மன்னிப்பு கேட்ட வீடியோ வெளியிட்ட நபரை தேடி வருகிறோம்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x