Published : 27 Aug 2021 03:12 AM
Last Updated : 27 Aug 2021 03:12 AM

விக்ரஹா ரோந்து கப்பல் சேவை தொடக்க விழா; சென்னையில் நாளை நடைபெறுகிறது: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு

சென்னை

ரோந்து படை கப்பல் விக்ரஹாவின் சேவை தொடக்க விழா சென்னையில் நாளை (ஆக.28) நடைபெறுகிறது. இவ்விழாவில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

இதுகுறித்து மத்திய பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட கடல் ரோந்து கப்பலான விக்ரஹாவை, இந்திய கடலோர காவல் படை ரோந்து கப்பல்கள் வரிசையில் ஏழாவதாக சேர்த்தல் மற்றும் அதன் சேவை தொடக்க விழா சென்னையில் நாளை நடைபெறுகிறது. மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்று ரோந்து கப்பல் சேவையை தொடங்கிவைக்கிறார். இந்நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.

ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள விசாகப்பட்டினத்தை மையமாகக் கொண்டு செயல்படவிருக்கும் இந்த கப்பல், கடலோர காவல் படையின் கிழக்கு பகுதி தளபதியின் கட்டுப்பாட்டில் கிழக்கு கடல் பகுதியில் பணியாற்றும். இந்த கப்பல் 98 மீட்டர் நீளம் கொண்டது. அதில் 11 அதிகாரிகள் மற்றும் 110 மாலுமிகள் இருப்பார்கள்.

எல் அண்டு டி ஷிப் பில்டிங் நிறுவனத்தால் கட்டமைக்கப்பட்டுள்ள இக்கப்பலில் நவீன தொழில்நுட்ப ராடார்கள், தொலைதொடர்பு மற்றும் பயணக் கருவிகள், சென்சார்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன. ஒரு போஃபொர்ஸ் துப்பாக்கி, இரு 12.7 மிமீ ரிமோட் கண்ட்ரோல் துப்பாக்கிகள் உள்ளிட்டவையும் இக்கப்பலில் உள்ளன. ஒரு ஹெலிகாப்டர் மற்றும் 4 அதிவேக படகுகளை அந்த கப்பல் சுமந்து செல்லும். இந்த கப்பலுடன் சேர்த்து, 157 கப்பல்கள் மற்றும் 66 விமானங்கள் இந்திய கடலோர காவல் படையிடம் உள்ளன.

ராணுவ தளபதி ஜெனரல் எம்.எம்.நரவனே, இந்திய கடலோர காவல் படை தலைமை இயக்குநர் கே.நடராஜன் உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x