Published : 27 Aug 2021 03:12 AM
Last Updated : 27 Aug 2021 03:12 AM

ராமேசுவரத்தில் நீர் ஆதாரத்தை பலப்படுத்த 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம்

ராமேசுவரம் தீவு கடற்பகுதியை பலப்படுத்தவும், கடல் அரிப்பைத் தடுக்கவும், நன்னீர் ஆதாரத்தைப் பெருக்கவும் கடலோரப் பாதுகாப்புக் குழுமம் சார்பில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணிகளை கடலோரப் பாதுகாப்புக் குழும கூடுதல் டி.ஜி.பி சந்தீப் மிட்டல் நேற்று தொடங்கி வைத்தார்.

ராமேசுவரம், தங்கக்சிமடம், தனுஷ்கோடி, பாம்பன் பகுதிகளில் கடல் அரிப்பால் ராமேசுவரம் தீவு மக்கள் பல காலமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

கடல் சீற்றம், அரிப்பால் கடலோரக் குடிசைகள் அழிவதுடன் மீனவர்கள் வேறிடங்களுக்கு புலம் பெயர வேண்டிய நிலை ஏற்படுகிறது. மேலும் நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் ஒரு கோடிக்கும் அதிகமான பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் ராமேசுவரம் வருகின்றனர். அவர்களுக்குத் தேவையான தண் ணீர் மண்டபம் ஒன்றியப் பகுதியில் இருந்தே பெறப்படுகிறது. இதனால் ராமேசுவரம் தீவு கடல் பகுதியை பலப்படுத்தவும், கடல் அரிப்பைத் தடுத்து நன்னீர் ஆதாரத்தைப் பெருக்கவும் நட வடிக்கை எடுக்க மீனவ மக்கள் பல ஆண்டுகளாக கோரி வந்தனர்.

இந்நிலையில், கடலோரப் பாதுகாப்புக் குழுமத்தின் சார்பாக 10 ஆயிரம் மரக்கன்றுகளை நடும் பணிகளை, ராமேசுவரம் ஓலைக்குடா கடற்கரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கடலோரப் பாதுகாப்புக் குழும கூடுதல் டி.ஜி.பி சந்தீப் மிட்டல் நேற்று தொடங்கி வைத்தார். கடலோரப் பாதுகாப்புக் குழுமத்தின் துணைத் தலைவர் சின்னச்சாமி, காவல் கண்காணிப்பாளர் குணசேகரன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன், துணை கண்காணிப்பாளர் குமார், காவல் ஆய்வாளர் கனகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் வேம்பு, புங்கை உள்ளிட்ட பல்வேறு மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து ஒரு மாத காலத்தில் பாம்பன், தங்கச்சிமடம், தனுஷ்கோடி உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் 10 ஆயிரம் பனை விதைகள் நடப் படும் என கடலோரப் பாதுகாப்புக் குழுமத்தின் காவலர்கள் தெரி வித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x