Published : 25 Aug 2021 05:34 PM
Last Updated : 25 Aug 2021 05:34 PM

தெப்பக்குளத்தில் படகுசவாரி தொடங்கப்படவில்லை: மதுரை மக்கள் ஏமாற்றம்

மதுரை

தமிழகம் முழுவதும் படகு குழாம் உள்ள சுற்றுலாத் தலங்களில் படகு சவாரி தொடங்கிய நிலையில் மதுரை வண்டியூர் தெப்பக்குளத்தில் தண்ணீர் கடல் போல் நிரம்பியிருந்தும் படகு சவாரி தொடங்காததால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

மதுரையில் பொதுமக்கள் குழந்தைகளுடன் அதிக அளவு செல்லக்கூடிய முக்கிய சுற்றுலாத் தலமாக வண்டியூர் மாரியம்மன் கோயில் தெப்பக்குளம் உள்ளது. இந்த தெப்பக்குளம், இந்து அறநிலையத்துறை வசமிருக்கிறது. இந்த தெப்பக்குளத்தில் படகு சவாரி செயல்பட்டுக் கொண்டிருந்தது. குழந்தைகள், பெரியவர்கள், படகு சவாரி செய்து தெப்பக்குளத்தின் அழகைக் கண்டு ரசிப்பார்கள். கரோனா ஊரடங்கால் சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டதால் தெப்பக்குளம் படகு குழாமும் மூடப்பட்டது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள சுற்றுலாத் தலங்களில் உள்ள படகு குழாம்கள் செயல்பட அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதனால், கொடைக்கானல் படகு குழாம் கடந்த சில நாட்களுக்கு முன் செயல்படத் தொடங்கியது. சுற்றுலாப் பயணிகள், குதூகலமாக அங்குள்ள படகு குழாமில் படகு சவாரி செய்து மகிழ்கின்றனர். சீதோஷ்ண நிலையைத் தவிர படகு குழாம் படகு சவாரி செய்வதற்காகவே கொடைக்கானலுக்கு சமீபகாலமாக சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள்.

தற்போது படகு சவாரி செயல்படத் தொடங்கிய பிறகு கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. ஆனால், மதுரையில் உள்ள வண்டியூர் மாரியம்மன் கோயில் தெப்பக்குளத்தில் படகு சவாரி இன்னும் தொடங்கப்படவில்லை. படகுகள் தெப்பக்குளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதனால், அவை சிதலமடைந்து வருகின்றன.

தெப்பக்குளமும் யாரும் உள்ளே செல்லாதவாறு இழுத்து மூடப்பட்டுள்ளது. கடல் போல் தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரம்பியிருந்தும் படகு குழாமில் படகு சவாரி இயக்கப்படாததால் மதுரை மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

தற்போது சுற்றுலாத் தலங்களில் உள்ள படகு குழாம்களில் படகு சவாரி செயல்பட அரசு அனுமதி வழங்கியுள்ளதால் வண்டியூர் தெப்பக்குளத்தில் படகு சவாரி செயல்பட மாநகராட்சியும், இந்து சமய அறநிலையத்துறையும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

இதுகுறித்து மீனாட்சியம்மன் கோயில் இணை ஆணையர் செல்லத்துரையிடம் கேட்டபோது, ‘‘மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி கேட்டு விரைவில் தெப்பக்குளத்தில் விரைவில் படகு சவாரி விடுவதற்கு ஏற்பாடு செய்யப்படும்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x