Published : 25 Aug 2021 03:15 AM
Last Updated : 25 Aug 2021 03:15 AM

வாரிசு வேலைக்காக பாவாணரின் பேரன் 20 ஆண்டாக போராட்டம்

பாவாணரின் பேத்தி சண்முகக்கனி, அவரது மகன் அருள்ராஜ்.

மதுரை

பாவாணரின் அண்ணன் மகன்வழிப் பேத்திக்கு உரிய உதவிவழங்கப்படும் என்று தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சர் அறிவித்துள்ள நிலையில், பாவாணரின் நேரடிக் கொள்ளுப்பேரன், இறந்ததனது தந்தையின் வாரிசு வேலைக்காக 20 ஆண்டுகளாக போராடும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய மொழிகளிலேயே மூத்தமொழி தமிழ் என்பதை தன்னுடைய வேர்ச்சொல் ஆராய்ச்சியின் மூலம் நிறுவியவர் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர். அவரது அண்ணன் குருபாதம் வழிப் பேத்தி ரச்சேல் ஜெமிம்மா(75). இவர் வறுமையால் கையேந்தும் நிலையில் இருக்கும் தகவல் தெரியவந்ததும், தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவரை நேரில் வரச்சொல்லி குறைகளைக் கேட்டறிந்ததுடன், அரசு சார்பில் உதவிகள் செய்வதாக வாக்குறுதியும் அளித்தார்.

இந்த சூழலில், பாவாணரின் நேரடி வாரிசுகளில் ஒருவரே வறுமையில் வாடும் தகவல் வெளியாகியுள்ளது. பாவாணரின் மூத்த மகன் அழகியமணவாளதாசனின் மகனும் கிராம நிர்வாக அலுவலருமான மேசியாதாஸ் கடந்த 2000ம் ஆண்டு இறந்ததைத் தொடர்ந்து, அவரது மனைவி சண்முககனி என்ற மேரி 20 ஆண்டுகளாக வாரிசு வேலை கேட்டுப் போராடிக் கொண்டிருக்கிறார்.

இதுகுறித்து அவர் நம்மிடம் கூறியபோது, ‘‘நான் பிஎஸ்சி பிஎட்படித்திருந்ததால் வாரிசு வேலைக்காக ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலகத்துக்கும், தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்துக்கும் அலையாய் அலைந்தேன். வேலை கிடைக்கவில்லை. இப்படியே 20 ஆண்டுகள் ஓடிவிட்டன. இப்போது எனக்கு 60 வயதாகிவிட்டது’’ என்றார். அவரது மகன் அருள்ராஜ் கூறும்போது, ‘‘எனக்கு வாரிசு வேலை கிடைத்தால், நன்றாக இருக்கும். எங்கள் குடும்பத்துக்கும் முதல்வர் உரிய வழிகாட்டுவார் என்று மலைபோல் நம்புகிறோம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x