Published : 23 Aug 2021 03:13 AM
Last Updated : 23 Aug 2021 03:13 AM
தங்க நகைகளுக்கு தனி ஹால்மார்க் அடையாள எண் கட்டாயமாக்கப்படுவதை கண்டித்து நாடு முழுவதும் இன்று காலை அடையாள கடையடைப்பு போராட்டம் நடத்தப்படுவதாக நகை வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
தங்க நகைகளின் தரத்தை குறிக்க அவற்றில் ஹால்மார்க் முத்திரை பதிக்கப்படுகிறது. இதனால் மக்கள் நம்பிக்கையுடன் தங்க நகைகளை வாங்குகின்றனர். இதற்கிடையே, மத்திய அரசு முதல்கட்டமாக 28 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை சேர்ந்த 256 மாவட்டங்களில் மட்டும் தங்க நகைகளுக்கு 'ஹால்மார்க்' முத்திரை பதிப்பதை கட்டாயமாக்கியுள்ளது. நகைக் கடைகளில் விற்கப்படும் அனைத்து தங்க நகைகளிலும் 6 இலக்கம் கொண்ட தனி ஹால்மார்க் அடையாள எண்ணை (எச்யுஐடி) பதிவு செய்யவேண்டும் என இந்திய தர நிர்ணய ஆணையம் (பிஐஎஸ்) அறிவித்துள்ளது. இதற்கு நகை வியாபாரிகள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இதுதொடர்பாக சென்னை நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் உதய் உம்மிடி, தங்க நகை, வைர வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
பெரிய நிறுவனங்கள் ஏற்கெனவே ஹால்மார்க் முத்திரையை பயன்படுத்தி வருகின்றன. தற்போது, இந்த முத்திரை அனைத்து நகை கடைகளுக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தங்கத்தின் தரத்தை உறுதி செய்யும் ஹால்மார்க் முத்திரையை வரவேற்கிறோம். ஆனால், தனி ஹால்மார்க் அடையாள எண்ணை கொண்டுவர வேண்டும் என இந்திய தர நிர்ணய அமைப்பு தன்னிச்சையாக எடுத்த முடிவை எதிர்க்கிறோம்.
இதன்மூலம் தங்க நகையை யார் வாங்குகின்றனர், அவர்களது பின்னணி என்ன என்பதை கண்காணிப்பார்கள். இந்திய தர நிர்ணய ஆணையம் நகையின் தரத்தை பார்ப்பதை விட்டுவிட்டு, இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடுவது தேவையற்றது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 23-ம் தேதி (இன்று) காலை 9 மணி முதல் 11.30 மணி வரை கடையடைப்பு செய்ய உள்ளோம். சென்னையில் உள்ள 7 ஆயிரம் கடைகள் உட்பட தமிழகத்தில் 35 ஆயிரம் நகைக் கடைகள் இந்த குறிப்பிட்ட நேரத்தில் மூடப்பட்டிருக்கும். நாடு முழுவதும் நடத்தப்படும் இப்போராட்டத்தில் 2 லட்சம் கடைகள் பங்கேற்கின்றன.
இது அடையாள போராட்டம்தான். எங்கள் கோரிக்கையை மத்திய அரசு ஏற்காவிட்டால், அடுத்தகட்ட போராட்டம் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT