Published : 22 Aug 2021 03:13 AM
Last Updated : 22 Aug 2021 03:13 AM

கர்நாடக அரசு காவிரி நீரை காலம் தாழ்த்தாமல் திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு ஜி.கே.வாசன் கோரிக்கை

தமிழகத்துக்கு ஆகஸ்ட் மாதத்துக்கான காவிரி நீரை கர்நாடக அரசு காலம் தாழ்த்தாமல் திறந்துவிட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்றுவெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கர்நாடக அரசு காவிரியில் இருந்து தமிழகத்துக்கு ஆகஸ்ட் மாதத்தில் 40 டிஎம்சி தண்ணீரைத் திறந்துவிட வேண்டும்.

ஏனென்றால், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, அரியலூர் மாவட்டங்களில் சுமார் 20 லட்சம் ஏக்கர் பாசன நிலங்களும், திருச்சி, கரூர், நாமக்கல் மாவட்டங்களில் 2.5 லட்சம் ஏக்கர் பாசன நிலங்களும் சாகுபடிக்குத் தயார் நிலையில் உள்ளன.

டெல்டா மாவட்ட விவசாயிகள் மேட்டூர் அணையை நம்பியே சம்பா சாகுபடிக்கு ஆயத்தமாகின்றனர். இந்த சூழலில், காவிரியில் இருந்துதமிழகத்துக்கு உரிய காவிரி நீரைகர்நாடகா அரசு திறந்தால் மட்டுமே, தமிழக விவசாயத்துக்கு தண்ணீர் கிடைக்கும்.

எனவே, கர்நாடக அரசு தமிழகத்துக்கு ஆகஸ்ட் மாதத்துக்கான காவிரி நீரை உடனடியாக திறந்துவிட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

குறிப்பாக, காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் உத்தரவை கர்நாடக அரசு மதித்து செயல்படுவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x