Published : 21 Aug 2021 05:02 PM
Last Updated : 21 Aug 2021 05:02 PM

கூட்டுறவு சங்கத்தில் விவசாயக் கடன் முறைகேடு: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை உயர் நீதிமன்றம்: கோப்புப்படம்

சென்னை

சேலம் மாவட்டம், செல்லியம்பாளையம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கத்தில் விவசாயக் கடன் வழங்கியதில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரிக்க லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிடக் கோரிய மனுவுக்கு, ஒரு வாரத்தில் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்ற பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்து, கடந்த பிப்ரவரி மாதம் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்ட பிறகு, முன்தேதியிட்டுக் கடன்கள் வழங்கி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக, சேலம் மாவட்டம், செல்லியம்பாளையம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கத்தின் தலைவருக்கு எதிராகக் குற்றம் சாட்டி, சங்கத்தின் உறுப்பினர் குணசேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

அவர் தனது மனுவில், கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் எனக் கணித்து, கூட்டுறவு சங்கத் தலைவர், 2020 ஆகஸ்ட் முதல் 2021 ஜனவரி வரை போலிப் பெயர்களில் பலருக்குப் பயிர்க் கடன்களை வழங்கியதன் மூலம் சங்கத்துக்கு லட்சக்கணக்கான ரூபாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

விவசாயிகளின் கடன் சுமையைக் குறைக்கும் நல்லெண்ணத்தில் அரசு பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்ததைக் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் தவறாகப் பயன்படுத்தியுள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

2020 ஜூன் முதல் 2021 பிப்ரவரி வரை செல்லியம்பாளையம் கூட்டுறவு சங்கம் வழங்கிய பயிர்க் கடன் குறித்து விசாரிக்கும்படி, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வழக்கை இன்று (ஆக. 21) விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை செப்டம்பர் 1-ம் தேதிக்குத் தள்ளிவைத்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x