Published : 19 Aug 2021 03:11 AM
Last Updated : 19 Aug 2021 03:11 AM
சென்னையில் 2-வது கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
சென்னையில் தற்போது 2 வழித்தடங்களில் 54 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படுகிறது. பொதுமக்களின் தேவையை கருத்தில்கொண்டு சென்னையில் 2-வது கட்டமாக மாதவரம் - சிறுசேரி, மாதவரம் - சோழிங்கநல்லூர், பூந்த மல்லி - விவேகானந்தர் இல்லம் என 3 வழித்தடங்களில் மொத்தம் 119 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்களை இயக்குவதற்கான திட்டப்பணிகள் நடந்து வருகின்றன. சுரங்கம் தோண்டுவது, மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ள கட்டுமான நிறுவனங்கள் தேர்வு செய்து, அதற்கான பணி ஆணைகள் வழங்கப்பட்டு வருகின்றன. சில இடங்களில் கட்டுமானப் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன.
இதனிடையே, சட்டப்பேரவையில் நேற்று பட்ஜெட் மீதான விவாதத்தின் போது முதல்வர் ஸ்டாலின், ‘‘சென்னை யில் 2-வது கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த தமிழக அர சுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி யுள்ளது. ஏற்கெனவே டெல்லிக்குச் சென்று பிரதமர் மோடியை சந்தித்த போது, சென்னையில் 2-வது கட்ட மெட்ரோ ரயில் திட்டம் குறித்து அழுத்தம் கொடுத்து பேசியிருந்தேன். அந்த அழுத்தத்தின் அடிப்படையில்தான், அதற்கான அனுமதி இப்போது கிடைத் திருக்கிறது’’ என்று குறிப்பிட்டார்.
மத்திய அரசு நிதி
இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘‘சென்னையில் 2-வது கட்ட மெட்ரோ ரயில் திட்டம் எந்தவித தாமதமும் இன்றி செயல்பட, தனியார் நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு பணிகளை தொடங்கியுள்ளோம். மத்திய அரசின் அனுமதி கிடைத்துள்ளதால் இந்த திட்டத்துக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிதி தமிழக அரசு மூலம் விரைவில் எங்களுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகளை 2026-ல் முடிக்க திட்டமிட்டுள்ளோம்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT