Published : 05 Feb 2016 08:20 AM
Last Updated : 05 Feb 2016 08:20 AM

எரிவாயு குழாய் பதிக்க கெயில் நிறுவனத்துக்கு அனுமதி: உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய ஜெயலலிதா உத்தரவு

தமிழக விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் பதிக்க அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய கோரி தமிழக அரசின் சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்ய முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

கேரள மாநிலம் கொச்சியில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்க ளூருவுக்கு கூட்டநாடு, மங்களூரு வழியாக குழாயில் எரிவாயு கொண்டு செல்லும் திட்டத்தை இந்திய ஏரிவாயு ஆணையம் (கெயில்) செயல்படுத்துகிறது. இத்திட்டத்துக்கான குழாய், தமிழகம் வழியாக செல்கிறது. இதற் காக சேலம், கோவை, கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், திருப்பூர், ஈரோடு ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள விளைநிலங்களில் குழாய்களை பதிக்கும் பணிகளில் கெயில் நிறுவனம் ஈடுபட்டது.

இத்திட்டத்துக்கு தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து 2013-ம் ஆண்டு தொடர் போராட்டங்களை நடத்தினர்.

இதைத்தொடர்ந்து, விவசாயி களின் கருத்துகளை கேட்ட தமிழக அரசு, விளைநிலங்களை தவிர்த்து நெடுஞ்சாலை ஓரமாக குழாய் களை பதிக்குமாறு கெயில் நிறு வனத்திடம் கூறியது. ஏற்கெனவே விளைநிலங்களில் பதிக்கப்பட்ட குழாய்களை அகற்ற வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு இழப்பீடு வழங்கவும் தமிழக அரசு அறிவுறுத்தியது.

இதை எதிர்த்து கெயில் நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஏற்கெனவே திட்டமிட்ட பாதையில் குழாய்களை பதிக்கலாம் என கெயில் நிறுவனத்துக்கு சாதகமாக தீர்ப்பு வெளியானது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்த விசாரணையையடுத்து, கடந்த 2-ம் தேதி தீர்ப்பு கூறப்பட்டது.

திட்டமிட்ட பாதையில் கெயில் நிறுவனம் குழாய்களை பதிக்கலாம் என்றும், தமிழக அரசின் அறிவிப்பை ரத்து செய்தும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், தற்போதைய சந்தை மதிப்பின் அடிப்படையில் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவும் கெயில் நிறுவனத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என பல்வேறு கட்சிகள் வலியுறுத்தி வந்தன.

இந்நிலையில், நேற்று காலை தலைமைச் செயலகத்துக்கு வந்த முதல்வர் ஜெயலலிதா, அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், ஆர்.வைத்திலிங்கம், எடப்பாடி கே பழனிச்சாமி, பி.பழனியப்பன், பி.தங்கமணி, தலைமைச் செயலாளர் கு.ஞானதேசிகன், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், அரசு தலைமை வழக்கறிஞர் ஏ.எல்.சோமையாஜி, தொழில் துறை செயலாளர் ச.வி.சங்கர் ஆகியோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், தமிழகத்தின் 7 மாவட்டங்கள் வழியாக கெயில் நிறுவனம் குழாய்கள் பதிக்க உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பின் மீது தமிழக அரசின் சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்ய முதல்வர் ஜெயலலிதா அறிவுறுத்தினார். மேலும், அதில் எடுத்து வைக்க வேண்டிய முக்கிய வாதங்கள் தொடர்பாகவும் ஆலோசனை தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, அடுத்த சில தினங்களில் தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x