Published : 13 Aug 2021 04:21 PM
Last Updated : 13 Aug 2021 04:21 PM

தமிழக பட்ஜெட்: திருச்சியில் புதிய பேருந்து நிலையம்; கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம்

திருச்சிராப்பள்ளியில் புதியதாக ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் மற்றும் வணிக வளாகம் அமைக்கப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.

அதில் 2021 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் உள்ள அம்சங்கள்:

* ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட 27 நகரங்களில் பாதாள சாக்கடை திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

* குப்பைகள் உருவாகும் நிலையிலேயே 100 சதவிகிதப் பிரித்தலை உறுதி செய்வதன் வாயிலாகவும், வீடுகள்தோறும் குப்பைகள் சேகரித்தல் மற்றும் 100 சதவிகிதம் அகற்றுவதன் வாயிலாகவும் நாம் குப்பை இல்லா நகரங்களை உருவாக்குவோம். நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் உள்ள மண் சாலைகள் அனைத்தும் தரம் உயர்த்தப்படும். அனைத்து நகர்ப்புரங்களிலும் பாதசாரிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எளிதில் பயன்படுத்தத்தக்க நடைபாதைகள் அமைக்கப்படும்.

* நமக்கு நாமே திட்டப் பணிகளில் கணிசமாக பங்களிப்பவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் முதலமைச்சரின் சிறப்பு விருது வழங்கப்படும். இத்திட்டத்திற்காக, 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மக்கள் சேவையில் மாநகராட்சி மற்றும் நமது சேவையில் நகராட்சித் திட்டங்கள் மூலமாக அனைவருக்கும் இணையவழி சேவைகளை வழங்குவது உறுதி செய்யப்படும்.

* திருச்சிராப்பள்ளியில் புதியதாக ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் மற்றும் வணிக வளாகம் TUFIDCO நிதியுதவியுடன் ஏற்படுத்தப்படும்.

*தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யும் நோக்கத்தில், ‘கலைஞர் நகர்ப்புர மேம்பாட்டுத் திட்டம்’ என்ற புதிய திட்டத்தை ரூபாய் 1,000 கோடி மதிப்பீட்டில் இந்த அரசு 2021-22 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்த உள்ளது.

* 2021-22-க்கான வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகளில், சீர்மிகு நகரங்கள் திட்டத்திற்கு 2,350 கோடி ரூபாயும், அம்ருத் திட்டத்திற்கு 1,450 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* ஆசிய மேம்பாட்டு வங்கியின் உதவியுடன் கொசஸ்தலை ஆற்றுப் படுகையில் ஒருங்கிணைந்த வெள்ள நீர் வடிகால் அமைப்பு ஏற்படுத்தப்படும். இதற்கென 2021-22 ஆம் ஆண்டின் வரவு செலவுத்திட்டத்தில் 87 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x