Published : 13 Aug 2021 02:31 PM
Last Updated : 13 Aug 2021 02:31 PM

அடுத்த 5 ஆண்டுகளில் 8 லட்சம் குடும்பங்களுக்கு வீடு: நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உறுதி

அடுத்த 5 ஆண்டுகளில் 8 லட்சம் குடும்பங்களுக்கு வீடு வழங்குவதை உறுதி செய்வோம் என, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (ஆக. 13) காலை 10 மணிக்கு இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்து உரையாற்றினார்.

அதன் சிறப்பம்சங்கள்:

* மாநிலத்திலுள்ள அனைத்து 79,395 குக்கிராமங்களுக்கும் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ஒரு நபருக்கு 55 லிட்டர் தரமான குடிநீர் வழங்க வழிவகை செய்யப்படும். கிராமப்புரங்களில் அமைந்துள்ள 1.27 கோடி குடும்பங்களுக்கும் வீட்டு குடிநீர் இணைப்புகள் வழங்க வழிவகை செய்யப்படும். தற்போது வீட்டுக்கான குடிநீர் இணைப்பு இல்லாத
83.92 லட்சம் குடும்பங்களுக்கும் 2024 ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதிக்குள்ளாக குடிநீர் இணைப்பு வசதிகள் வழங்க வழிவகை செய்யப்படும். இந்த நோக்கத்தை நிறைவேற்ற 2,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஜல் ஜீவன் இயக்கம் செயல்படுத்தப்படும்.

* முழுமையடையாத அனைத்து வீடுகளும் விரைந்து முடிக்கப்படுவதை இந்த அரசு உறுதி செய்வதுடன், 2021-22 ஆம் ஆண்டில் மொத்தம் 8,017.41 கோடி ரூபாய் செலவில், மேலும் 2,89,877 வீடுகள் கட்டப்படும். கிராமப்புரங்களில் தற்போது வீடு இல்லாத 8,03,924 குடும்பங்களுக்கும் அடுத்த 5 ஆண்டுகளில் வீடு வழங்கப்படுவதை இந்த அரசு உறுதி செய்யும். தற்போதுள்ள மேற்கூரைக்கான செலவான 50 ஆயிரம் ரூபாயுடன், கூடுதலாக மாநில அரசின் தரப்பிலிருந்து 70 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவதால், ஒரு வீட்டுக்கான அரசு மானியம் 2.76 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மிகவும் ஏழை, எளிய பயனாளர்களுக்கு விரைவாக, விலைக் குறைவாக வீடுகள் கட்டுவதற்காக, நவீன, விலை குறைவான கட்டுமான தொழில்நுட்பங்களை இந்த அரசு ஊக்குவிக்கும். 2021-22 ஆம் ஆண்டுக்கான திருத்த வரவு செலவுத்திட்ட மதிப்பீட்டில் கிராமப்புர வீட்டு வசதித் திட்டத்தில், 3,548 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

* சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்திற்கான நிதி, நடப்பு ஆண்டிலிருந்து ஒரு தொகுதிக்கு 3 கோடி ரூபாயாக மீண்டும் அளிக்கப்படும்.

* இந்த அரசு, 2021-22 ஆம் ஆண்டில் 1,200 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தைத் தொடங்கவுள்ளது. இத்திட்டம், குக்கிராம அளவில் நிலவும் அடிப்படை உட்கட்டமைப்புக்கான இடைவெளிகளை நிறைவு செய்வதை உறுதி செய்யும்.

* கருணாநிதி அறிமுகப்படுத்திய மிகப் புகழ்பெற்ற திட்டம் 'நமக்கு நாமே' திட்டம். இத்திட்டம், உள்ளூர் சமூகங்களுடன் இணைந்து உள்ளூரின் முக்கியமானப் பணிகளை மேற்கொள்ள மீண்டும் அறிமுகப்படுத்தப்படும். 2021-22 ஆம் ஆண்டில் இத்திட்டத்துக்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரத் திட்டம் புதுப்பிக்கப்பட்டு 36,218 சுய உதவிக்குழுக்கள் பயன்பெறும் வகையில் 809.79 கோடி ரூபாய் செலவில் 2021-22 ஆம் ஆண்டில் செயல்படுத்தப்படும். நடப்பு ஆண்டில் தமிழகத்தில் உள்ள சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிகளின் உதவியுடன் 5,500 கோடி ரூபாய் சிறப்பு கோவிட் கடன் உட்பட 20,000 கோடி ரூபாய் கடன் உறுதிசெய்யப்படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x