Published : 12 Aug 2021 03:21 AM
Last Updated : 12 Aug 2021 03:21 AM

அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு எதிராக வழக்கு: சிறப்பு நீதிமன்ற விசாரணையில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு

சென்னை

சிறப்பு நீதிமன்றத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு எதிராக நடந்து வரும் வழக்கு விசாரணைக்கு அவர் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஏற்கெனவே சென்னை மேயராக பதவி வகித்தபோது, சென்னை கிண்டி சிட்கோ பகுதியில் கண்ணன் என்பவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வீட்டு மனையை தன் மனைவியின் பெயருக்கு மாற்றியதாக பார்த்திபன் என்பவர் புகார் கொடுத்தார். இதன்படி கடந்த அதிமுக ஆட்சியில், மா.சுப்பிரமணியன், அவரது மனைவி காஞ்சனா ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி மா.சுப்பிரமணியன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணை நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பாக நடந்தது.

மனுதரார் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி, புகார்தாரர் கூறுவது போல எந்தவொரு முறைகேடும் நடைபெறவில்லை. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த புகார் அளிக்கப்பட்டு, அதன்பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும். கீழமை நீதிமன்றத்தில் இந்த வழக்கு நாளை (இன்று) விசாரணைக்கு வரவுள்ளது. அதில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் என வாதிட்டார்.

அதேபோல போலீஸ் தரப்பில் இந்த வழக்கில் பதிலளிக்க அவகாசம் கோரப்பட்டது.

அதையேற்ற நீதிபதி, சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணைக்கு நேரி்ல் ஆஜராவதில் இருந்து மனுதாரரான மா.சுப்பிரமணியனுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது எனக்கூறி வழக்கு விசாரணையை வரும் செப்.3-க்கு தள்ளி வைத்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x