Published : 27 Feb 2016 02:50 PM
Last Updated : 27 Feb 2016 02:50 PM

சேத்துப்பட்டு ஏரியில் ரூ.42 கோடியில் பசுமை பூங்கா: ஜெயலலிதா திறந்து வைத்தார்

சென்னை, சேத்துப்பட்டு ஏரியில் 42 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பொழுதுபோக்கு தூண்டில் மீன்பிடிப்பு மற்றும் பசுமை பூங்காவினை ஜெயலலிதா இன்று காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''முதல்வர் ஜெயலலிதா இன்று தலைமைச் செயலகத்தில், மீன்வளத்துறை சார்பில் சென்னை சேத்துப்பட்டு ஏரியில் 42 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள பொழுதுபோக்கு தூண்டில் மீன்பிடிப்பு மற்றும் பசுமை பூங்காவை காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.

மேலும், 114 கோடியே 58 லட்சத்து 69 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறைகளுக்கான கட்டடங்களை திறந்து வைத்து, 120 கோடியே 48 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள கால்நடை பராமரிப்புத் துறைக்கான பல்துறை அலுவலக வளாகம், கால்நடை மருந்தகக் கட்டடங்கள், மீன் விதைப் பண்ணைகள், மீன் இறங்குதளங்கள் ஆகியவற்றிற்கு அடிக்கல் நாட்டினார்.

பசுமை பூங்கா

நிலத்தடி நீர் மட்டத்தினை செறிவூட்டும் விதமாக ஏரிகள் மற்றும் இதர நீர்நிலைகளைப் புனரமைத்திட அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, சென்னையின் மத்திய பகுதியான சேத்துப்பட்டில், 16 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள மீன்வளத் துறைக்குச் சொந்தமான ஏரியினைப் புனரமைத்து, பொழுதுபோக்கு தூண்டில் மீன்பிடிப்பு மற்றும் பசுமை பூங்கா அமைக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதாவால் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டு, இப்பசுமை பூங்கா அமைத்திட 27.6.2014 அன்று அடிக்கல் நாட்டினார்.

சென்னை, சேத்துப்பட்டு ஏரியில் 42 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பொழுதுபோக்கு தூண்டில் மீன்பிடிப்பு மற்றும் பசுமை பூங்காவினை ஜெயலலிதா இன்று காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.

இந்தப் பசுமை பூங்காவில், மக்கள் தங்கள் உடல்நலத்தைப் பேணவும், ஓய்வு நேரத்தை பயனுள்ள வகையில் செலவிடவும், பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களான தூண்டில் மீன்பிடிப்பு, படகு சவாரி, ஊடக மையம், சிறுவர்கள் விளையாட்டு பூங்கா, பூக்களின் மகரந்த சேர்க்கைக்கென வண்ணத்துப் பூச்சிகளைக் கவர்ந்திட அமைக்கப்பட்டுள்ள மகரந்தப் பூங்கா ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

இவை தவிர, இப்பூங்காவில் பல்லுயிர் பெருக்கத்தை பாதுகாக்கும் வண்ணமும், பூங்கா பசுமையுடன் விளங்கும் வகையிலும் ஏரியின் கரையோரங்களில் நூற்றுக்கணக்கான அழகிய செடிகள் மற்றும் அரியவகை மரக்கன்றுகள் நடப்பட்டு, வளர்க்கப்பட்டு வருகின்றன. மேலும், இப்பூங்காவில் உள்ள ஏரி சுமார் 1 லட்சத்து 44 ஆயிரம் கன மீட்டர் மழைநீரைத் தேக்கும் திறன் கொண்ட வகையில் புனரமைக்கப்பட்டுள்ளதால், இதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் நிரந்தரமாகப் பாதுகாக்கப்படும்.

ஏரியில் உள்ள நாட்டுவகை மீன் இனங்களுடன், இந்திய பெருங்கெண்டை மீன்களான கட்லா, ரோகு மற்றும் மிர்கால், பங்கேசியஸ் மீன் இனங்கள் இருப்பு செய்யப்பட்டுள்ளன. இந்த பசுமை பூங்காவின் இயற்கை சூழலால் பூங்காவிற்கு வருகை புரியும் அரியவகைப் பறவைகளின் வரத்து அதிகரிக்கும்.

தமிழக அரசின் பல்வேறு நல்வாழ்வு திட்டங்களையும், மீன் வளத்துறை திட்டங்களையும் பொதுமக்களுக்கு எடுத்துசெல்லும் வகையில் பூங்காவில் குளிர்சாதன வசதியுடன் ஊடக மையம் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் மனஅழுத்தத்தை போக்கும் விதமாக, இப்பூங்காவில் முதல்முறையாக படகு சவாரி வசதி அமைக்கப்பட்டுள்ளது. மேலும், தூண்டில் மீன்பிடிப்பில் நாட்டம் உள்ளவர்களுக்காக உயர் ரக தொழில்நுட்ப தூண்டில் வசதியும், புதிதாக பயில்பவர்களுக்கு பயிற்சியாளர்கள் கொண்ட தூண்டில் மீன்பிடிப்பு வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன. பூங்காவில் பறவைகள் மற்றும் நீர்வாழ் உயிரின சிற்பங்கள், ஓவியங்கள் ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் ஏரியைச் சுற்றி உருவாக்கப்பட்டுள்ள சுமார் 1.5 கி.மீ. நடைபாதை, நடைபயிற்சி மேற்கொள்பவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

பூங்காவிற்கு வருகை தரும் பார்வையாளர்களுக்கு தரமான உணவினை வழங்கும் வகையில் சுகாதாரமான உணவகம் அமைக்கப்படும். பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ள பல அடுக்கு வாகன நிறுத்தத்தில் 66 நான்கு சக்கர வாகனங்ளும், 100 இருசக்கர வாகனங்களையும் நிறுத்தலாம்.

ஜெர்மன் தொழில் நுட்பத்தில் அமைக்கப்பட்டுள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் காற்றூட்டுகலங்கள் ஆகியவை மூலம் நீரின் தரம் உறுதிசெய்யப்படுவதால் அந்த ஏரியில் வளர்க்கப்படும் மீன்கள் ஆரோக்கியமான சூழலில் வளரும். மேலும், நீர் மற்றும் மண் தரமறிதல், மீன்நோய் கண்டறிதல் மற்றும் இதர ஆராய்ச்சிப் பணிகள் போன்ற மீன்வளப் பணிகளை மேற்கொள்ள தனி ஆய்வகமும் இப்பூங்காவில் செயல்பட்டு வருகிறது.

162 கால்நடை மருந்தகக் கட்டிடங்கள்

மேலும், அரியலூர், கோயம்புத்தூர், தருமபுரி, கரூர், நாகப்பட்டினம், ஈரோடு, பெரம்பலூர், ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், தேனி, திருநெல்வேலி, திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருவாரூர், திருப்பூர், திருச்சிராப்பள்ளி, வேலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் 35 கோடியே 62 லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில், அறுவை சிகிச்சை அறை, ஆய்வக அறை, சிகிச்சைக் கூடம் ஆகிய வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள 162 கால்நடை மருந்தகக் கட்டிடங்களை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

காஞ்சிபுரம் மற்றும் சிவகங்கையில் 1 கோடியே 21 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இரண்டு கால்நடை நோய் புலனாய்வு பிரிவு கட்டிடங்கள்; விருதுநகரில் 58 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கால்நடை பெருக்கம் மற்றும் தீவன அபிவிருத்தி நிலைய கட்டிடம்; தமிழ்நாட்டில் முதன்முறையாக கிருஷ்ணகிரியில் 49 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வருடத்திற்கு 15 லட்சம் மீன்குஞ்சுகள் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட குறுகிய காலத்தில் விரைவாக வளரக்கூடிய மீன் இனங்களான மரபு வழி மேம்படுத்தப்பட்ட பண்ணை திலேப்பியா மீன்குஞ்சுகள் பொரிப்பகத்தை திறந்து வைத்தார்.

சென்னை - அம்பத்தூர் பால் பண்ணை வளாகத்தில் 23 கோடியே 46 லட்சம் ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள ஐஸ்கிரீம் மற்றும் பனீர் தயாரிக்கும் தொழிற்சாலை; 46 கோடியே 74 லட்சம் ரூபாய் செலவில் அதிநவீன பால்பண்ணையாக விரிவாக்கம் செய்யப்பட்ட கோயம்புத்தூர் பால்பண்ணை; சென்னை - அசோக் பில்லர், திருவான்மியூர், வண்ணாந்துறை, பெசன்ட் நகர் ஆகிய இடங்களில் 2 கோடியே 43 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன ஆவின் பாலகங்கள்; தேனி மற்றும் திருவண்ணாமலையில் 1 கோடியே 26 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள துணைப் பதிவாளர் (பால்வளம்) அலுவலகக் கட்டிடங்களை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் சார்பில் நாகப்பட்டினம், ராமநாதபுரம் மற்றும் கடலூர் ஆகிய இடங்களில் 1 கோடியே 41 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையக் கட்டிடங்கள்; நாமக்கல் - வேளாண் அறிவியல் மையத்தில் 1 கோடியே 37 லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சமுதாய வானொலி நிலையக் கட்டிடம் என மொத்தம் 156 கோடியே 58 லட்சத்து 69 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறைகளுக்கான கட்டிடங்களை முதல்வர் ஜெயலலிதா இன்று திறந்து வைத்தார்.

கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத் துறையின் நிர்வாகப் பயன்பாட்டிற்காக 29 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள ஐந்து அடுக்கு பல்துறை அலுவலக வளாகம்; 7 கோடியே 98 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 38 கால்நடை மருந்தகக் கட்டிடங்கள்; மீன்வளத் துறை சார்பில், திருவள்ளூர் மாவட்டம்-பூண்டி, தருமபுரி மாவட்டம்-சின்னார், கிருஷ்ணகிரி மாவட்டம்-கொள்ளனூர், கரூர் மாவட்டம்-குளித்தலை மற்றும் திருக்காம்புலியூர், தஞ்சாவூர் மாவட்டம்-தட்டான்குளம், திண்டுக்கல் மாவட்டம்-அணைப்பட்டி, சிவகங்கை மாவட்டம்-பிரவலூர், திருநெல்வேலி மாவட்டம்-மணிமுத்தாறு ஆகிய இடங்களில் 24 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள மீன் விதைப் பண்ணைகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

காஞ்சிபுரம் மாவட்டம்-கோவளம், கடலூர் மாவட்டம்-பேட்டோடை, நாகப்பட்டினம் மாவட்டம்-திருமுல்லைவாசல் மற்றும் சாமந்தான்பேட்டை, தூத்துக்குடி மாவட்டம்-சிங்கித்துறை மற்றும் பழையக்காயல், கன்னியாகுமரி மாவட்டம்-கடியப்பட்டிணம் ஆகிய இடங்களில் 58 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள மீன் இறங்குதளங்கள்; என மொத்தம் 120 கோடியே 48 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத் துறை கட்டடங்களுக்கு முதல்வர் ஜெயலலிதா இன்று அடிக்கல் நாட்டினார்.

மீனவர்களுக்கான புதிய திட்டங்கள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றிடும் மீட்புப் பணியில் ஈடுபட்ட போது முற்றிலுமாக சேதமடைந்த 3 கண்ணாடி நாரிழையிலான படகுகளுக்கு தலா 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவிலான 3 கண்ணாடி நாரிழையிலான படகுகள்; வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 3 கண்ணாடி நாரிழையிலான கட்டுமரங்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் செலவிலான 3 கண்ணாடி நாரிழையிலான கட்டுமரங்கள் வழங்கும் அடையாளமாக ஒரு மீனவருக்கு கண்ணாடி நாரிழையிலான படகின் பதிவுச் சான்றிதழையும், ஒரு மீனவருக்கு கண்ணாடி நாரிழையிலான கட்டுமரத்தின் பதிவுச் சான்றிதழையும்; சில்லரை மீன் விற்பனையில் ஈடுபட்டுள்ள மீனவ மகளிர் மற்றும் மீனவர்களின் விற்பனை திறனை மேம்படுத்திடவும், வியாபார வருவாயினை பெருக்கிடவும், மாநில சமச்சீர் வளர்ச்சி நிதியுதவின் கீழ் 10 மீனவர் மற்றும் மீனவ மகளிர் கூட்டுறவு சங்கங்களுக்கு மீன் ஏற்றி சென்று வியாபாரம் செய்திட 71 லட்சம் ரூபாய் செலவிலான 10 ஊர்திகளை வழங்கிடும் அடையாளமாக சாத்தனூர் அணை பங்கு மீனவர் கூட்டுறவு சங்க தலைவருக்கு ஒரு ஊர்தியின் சாவி ஆகிய திட்டங்களை துவக்கி வைத்தார்.

கடலில் மீன்பிடிக்கும் மீனவர்களின் உயிர் மற்றும் உடைமைகளின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் வகையில், மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப்படகுகளுக்கு ஆபத்துகால எச்சரிக்கை தகவல் பரப்பும் கருவிகளை வழங்கும் திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக 2 கோடியே 38 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான 1600 ஆபத்துகால எச்சரிக்கை தகவல் பரப்பும் கருவிகளை வழங்கும் அடையாளமாக ஒரு மீனவருக்கு ஆபத்துகால எச்சரிக்கை தகவல் பரப்பும் கருவி ஆகிய திட்டங்களை துவக்கி வைத்தார்.

பாரம்பரிய மீன்பிடி கலன்களில் மீனவர்கள் கடலில் மீன்பிடிப்பில் ஈடுபடும் போது, இயற்கை சீற்றங்களால் ஆபத்துகளை சந்திக்க நேரிடும் போது, மீனவர்களின் உயிர்காக்க, ஒவ்வொரு இயந்திரம் பொருத்தப்பட்ட பாரம்பரிய மீன்பிடிகலனுக்கும் இரண்டு உயிர் காப்பு மிதவைகள் வழங்கும் திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக புதுக்கோட்டை மாவட்ட மீனவர்களுக்கு 1400 உயிர்காப்பு மிதவைகளும், நாகப்பட்டினம் மாவட்ட மீனவர்களுக்கு 6374 உயிர்காப்பு மிதவைகளும், ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களுக்கு 3538 உயிர்காப்பு மிதவைகளும், திருவாரூர் மாவட்ட மீனவர்களுக்கு 188 உயிர்காப்பு மிதவைகளும், என மொத்தம் 1 கோடியே 62 லட்சம் ரூபாய் செலவில் 11,500 உயிர்காப்பு மிதவைகளை வழங்கும் அடையாளமாக ஒரு மீனவருக்கு உயிர்காப்பு மிதவை என மொத்தம் 4 கோடியே 77 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் செலவிலான திட்டங்களை ஜெயலலிதா இன்று மீனவர்களின் பயன்பாட்டிற்காக வழங்கி, துவக்கி வைத்தார்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x