Published : 08 Aug 2021 12:36 PM
Last Updated : 08 Aug 2021 12:36 PM

ஆகஸ்ட் 13-ம் தேதி திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்: ஸ்டாலின் தலைமையில் நடக்கிறது

முதல்வர் மு.க.ஸ்டாலின்: கோப்புப்படம்

சென்னை

திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் வரும் 13-ம் தேதி மாலை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் முதல் பட்ஜெட் வரும் 13-ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. அன்றைய தினம் சட்டப்பேரவை சபாநாயகர் மு.அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூடி, எத்தனை நாட்கள் பட்ஜெட் கூட்டத்தொடரை நடத்துவது என்பது முடிவு செய்யப்படும். மறுநாள் 14-ம் தேதி முதல் முறையாக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதைத் தொடர்ந்து, துறை ரீதியாக மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற உள்ளது.

இந்நிலையில், வரும் 13-ம் தேதி மாலை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடருக்கு துறை ரீதியாக தயாரிப்புகள் குறித்து ஆலோசிக்க இக்கூட்டம் கூட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக, அரசு தலைமை கொறடா கோவி.செழியன் இன்று (ஆக. 08) வெளியிட்ட அறிவிப்பில், "முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம், வரும் 13-ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நடைபெறும்.

அப்போது, திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x