Last Updated : 06 Aug, 2021 03:08 PM

 

Published : 06 Aug 2021 03:08 PM
Last Updated : 06 Aug 2021 03:08 PM

மூன்று மாதங்களுக்கு பிறகு புதுச்சேரியில் திரையரங்குகள் திறப்பு: கேன்டீனில் ரசிகர்களை கவர இலவச சலுகை

புதுச்சேரி

மூன்று மாதங்களுக்கு பிறகு புதுச்சேரியில் திரையரங்குகள் இன்று திறக்கப்பட்டன. கேன்டீனில் ரசிகர்களை கவர ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்ற இலவச சலுகைகள் சில திரையரங்குகளில் தரப்பட்டன.

கரோனா ஊரடங்கினால் கடந்தாண்டு முதல் அலையின்போது மூடப்பட்டிருந்த திரையரங்குகள் தளர்வுகளினால் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 15ம் தேதி 200 நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்டது. அதையடுத்து இரண்டாம் கட்ட அலையால் கடந்த ஏப்ரல் மாதம் கடைசி வாரத்தில் திரையரங்குகள் மூடப்பட்டன. கிட்டத்தட்ட நூறு நாட்களுக்கு பிறகு புதுச்சேரியில் கரோனா தொற்று குறைவால் திரையரங்குகளை திறக்கலாம் என்று அரசு தளர்வை ஆகஸ்ட் முதல் தேதி அறிவித்தது. அதன்படி புதுச்சேரியில் திறக்கலாம் என்றாலும் எத்திரையரங்கும் திறக்கப்படவில்லை. திரையரங்கை தூய்மைப்படுத்தி பணிக்கு பணியாளர்களை வரவழைத்து, ஒவ்வொரு இருக்கைக்கும் இடையே யாரும் அமராமல் ஸ்டிக்கர் ஒட்டி இன்று திரையரங்குகள் திறக்கப்பட்டன.

குறிப்பிட்ட சில திரையரங்குகளில் பலூனில் வளைவுகள் அமைக்கப்பட்டு ரசிகர்களை வரவேற்றனர். கையில் வெப்பமானி மூலம் வெப்ப அளவை பார்த்து, கிருமிநாசினி மூலம் தூய்மைப்படுத்திக்கொண்டு முக கவசம் அணிந்தோரை திரையரங்குகளில் அனுமதித்தனர்.

புதுச்சேரியில் 17க்கும் மேற்பட்ட திரையரங்குகள் இருந்தாலும் பல திரையரங்குகளில் டப்பிங் படங்களும், முந்தைய கரோனா ஊரடங்கின்போது வெளியிட்டில் இருந்த படங்களும் மட்டுமே திரையிடப்பட்டன. ரசிகர்களின் எண்ணிக்கையும் குறைவாகவே இருந்தன. அத்துடன் 50 சத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். குறிப்பாக காலை, மதியம், மாலை காட்சி என மூன்று காட்சிகளுக்கு மட்டுமே அனுமதி தரப்பட்டுள்ளது. இரவு காட்சி கிடையாது.

ரசிகர்களை கவர கேன்டீனில் சலுகைகளையும் சில திரையரங்குகளில் அறிவித்துள்ளனர். குறிப்பாக ஒரு பாப்கார்ன் வாங்கினால் ஒன்று இலவசம், ஒரு பப்ஸ் வாங்கினால் இன்னொன்று இலவசம் என்ற அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளனர்.
நுழைவுச்சீட்டுகளை ஆன்லைனில் தர அறிவுறுத்தப்பட்டுள்ளது. திரையரங்கில் தந்தால் சமூக இடைவெளியை கடைபிடிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது. அத்துடன் திரையரங்க ஊழியர்கள் தடுப்பூசி செலுத்தியதையும் அரசு உறுதிப்படுத்தியுள்ளது. தடுப்பூசி தொடர்பான விழிப்புணர்வையும் திரையரங்குகளில் மக்களுக்கு ஏற்படுத்தும் நிகழ்வுகளும் நடந்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x