Published : 06 Aug 2021 03:19 AM
Last Updated : 06 Aug 2021 03:19 AM

பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி

பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா

நாகர்கோவில்

இந்து மதம், பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறித்து சர்ச்சைக்கு உரிய வகையில் பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவின் ஜாமீன் மனு நாகர்கோவில் நீதிமன்றத்தில் நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம், அருமனையில் கடந்த 18-ம் தேதி கிறிஸ்தவ இயக்கம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில், பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா சர்ச்சைக்கு உரிய வகையில் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் பெரும்பரபரப்பாகி, தமிழகத்தில் மதரீதியிலான அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்து மதம், வழிபாட்டுமுறைகள், பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு, தேர்தலில் திமுக வெற்றிபெற்ற விதம், தமிழக அமைச்சர்கள், மற்றும் எம்எல்ஏ-க்களைக் கடுமையாக அவர் விமர்சனம் செய்திருந்தார்.

7 பிரிவுகளில் வழக்கு

இது தொடர்பாக, பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா, நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த கிறிஸ்தவ இயக்கச் செயலாளர் ஸ்டீபன் ஆகியோர் மீது 7 பிரிவுகளில் அருமனை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, இருவரையும் கைது செய்தனர். ஜார்ஜ் பொன்னையா பாளையங்கோட்டை சிறையிலும், ஸ்டீபன் தூத்துக்குடி சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வழக்கில் ஜாமீன் கேட்டு ஏற்கெனவே பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவும், ஸ்டீபனும் குழித்துறை குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு, ஜூலை 30-ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.

மீண்டும் ஜாமீன் கேட்டு நாகர்கோவிலில் உள்ள மாவட்டநீதிமன்றத்தில் ஜார்ஜ் பொன்னையா விண்ணப்பித்தார். இந்தமனுவை நேற்று மாலை நாகர்கோவில் மாவட்ட அமர்வு நீதிபதி அருள்முருகன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x