Published : 05 Aug 2021 03:18 AM
Last Updated : 05 Aug 2021 03:18 AM
வானகரம் அருகே சினிமா படப்பிடிப்புக்கு அரங்கம் அமைக்கும் தனியார் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
தாம்பரம் - மதுரவாயல் பைபாஸில், வானகரம் சர்வீஸ் சாலையில் சினிமா படப்பிடிப்புக்கு அரங்கம் அமைக்கும் தனியார் நிறுவனம் உள்ளது. இதன் அருகிலேயே கார் சர்வீஸ் செய்வது மற்றும் உதிரிப்பாகங்களை விற்கும் குடோனும் உள்ளது. இந்நிலையில், நேற்று பிற்பகலில் சினிமா செட் அமைக்கும் தனியார் நிறுவனத்தின் ஒரு பகுதியில் தீப்பிடித்தது.
அந்நிறுவனத்தின் காவலாளி இதுகுறித்து தீயணைப்பு கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். அதற்குள் பழைய கார்கள் உதிரிப்பாகங்கள் விற்பனை செய்யும் குடோனுக்கும் தீ பரவியது.
தகவலறிந்து மதுரவாயல், கோயம்பேடு, பூந்தமல்லி உட்படபல இடங்களில் இருந்து 14 வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். பல மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ அணைக்கப்பட்டது. அதற்குள் ஏராளமான பொருட்கள் சேதமடைந்தன.
தீப்பிடித்த குடோனின் அருகில் இருந்த, கிறிஸ்தவ பிரார்த்தனை மையம் மற்றும் முன்னாள் அமைச்சரும் அதிமுக மாவட்ட செயலாளருமான பென்ஜமினின் அலுவலகத்திலும் புகை மூட்டம்சூழ்ந்து அங்கிருந்த பொருட்களும் சேமடைந்ததாக போலீஸார் தெரிவித்தனர். இந்த தீ விபத்து குறித்து மதுரவாயல் காவல் நிலைய போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT