Published : 26 Jun 2014 03:25 PM
Last Updated : 26 Jun 2014 03:25 PM

2-வது திருமணம் செய்த கணவருக்கு சிறை: தூத்துக்குடி பெண்ணின் 10 ஆண்டு கால போராட்டத்தில் வெற்றி

தான் உயிருடன் இருக்கும்போதே வேறு ஒரு பெண்ணை 2-வதாக திருமணம் செய்த கணவரை, சிறைக்கு அனுப்புவதில் 10 ஆண்டு காலம் உறுதியாக இருந்து வெற்றியும் பெற்றுள்ளார் பெண்.

தூத்துக்குடியைச் சேர்ந்தவர் சங்கரவடிவு. இவரது கணவர் சங்கரன். இவர்களுக்கு 1996, ஜூலை 7-ல் திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்குப் பிறகு மேலும் வரதட்சிணைக் கேட்டு சங்கரனும், அவரது குடும்பத்தினரும் சங்கரவடிவை துன்புறுத்தி வந்தனராம்.

பின்னர், 2002, ஜன. 30-ல் வேறு ஒரு பெண்ணை சங்கரன் திருமணம் செய்யவுள்ளதாகத் தகவலறிந்து, தனது பெற்றோருடன் சங்கரவடிவு அங்கு சென்றபோது, திருமணம் நடந்தேறிவிட்டது. இதையடுத்து, சங்கரவடிவு போலீஸில் புகார் கொடுத்தார். ஆனால், நடவடிக்கை எடுக்கப்படாததால் தூத்துக்குடி நீதித் துறை நடுவர் நீதிமன்றத்தில் அவர் வழக்குத் தொடர்ந்தார். இதில், சங்கரன் உள்ளிட்டோருக்கு தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இதை எதிர்த்து சங்கரன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த மாவட்ட நீதிமன்றம், 2-வது திருமணம் செய்ததற்கான ஆதாரம் இல்லை என்று கூறி, சங்கரனுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்து 2008-ல் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றக் கிளையில் சங்கரவடிவு சீராய்வு மனுத் தாக்கல் செய்தார்.

சீராய்வு மனுவை விசாரித்து நீதிபதி பி.என். பிரகாஷ் பிறப்பித்த உத்தரவு:

மனுதாரரின் கணவர் 2-வது திருமணம் செய்ததை நேரில் பார்த்த சாட்சிகள் உள்ளனர். அந்த சாட்சிகள் இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றதாகக் கூறியுள்ளனர். எனவே, சங்கரனுக்கு தண்டனை வழங்கியதில் தவறில்லை.

அதேவேளையில், திருமணத்துக்கு வந்தவர்களுக்கு தண்டனை வழங்குவது சரியல்ல. அவர்களுக்கு சங்கரன் முதல் மனைவியை விவாகரத்து செய்தாரா? இல்லையா? என்பது தெரியாது.

எனவே, கீழ் நீதிமன்றம் சங்கரனுக்கு வழங்கிய 2 ஆண்டு தண்டனை உறுதி செய்யப்படுகிறது. அதேவேளையில், அவரது பெற்றோருக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு தண்டனை அவர்களது வயதைக் கருத்தில் கொண்டு ஒரு மாத கடுங்காவல் தண்டனையாகக் குறைக்கப்படுகிறது என்று நீதிபதி உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x