Published : 01 Aug 2021 06:30 AM
Last Updated : 01 Aug 2021 06:30 AM

வேளச்சேரி - ஆதம்பாக்கம் இடையே பறக்கும் ரயில் திட்டப் பணிகள் நிறைவு: பாதுகாப்பு ஆணையர் விரைவில் ஆய்வு

சென்னை வேளச்சேரி - ஆதம்பாக்கம் இடையே ரயில் திட்டப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்தத் தடத்தில் பாதுகாப்பு ஆணையரகக் குழுவினர் ரயிலை இயக்கி விரைவில் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். படம்: பு.க.பிரவீன்.

சென்னை

வேளச்சேரி - ஆதம்பாக்கம் இடையே ரயில் திட்டப் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இந்த தடத்தில் பாதுகாப்பு ஆணையர் குழுவினர் விரைவில் ஆய்வு நடத்தஉள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் கடற்கரை முதல் வேளச்சேரி வரையிலான பறக்கும் ரயில் சேவையை, பரங்கிமலை வரை நீட்டிக்க தெற்கு ரயில்வே முடிவு செய்தது. இதையடுத்து, வேளச்சேரியில் இருந்து சுமார் 5 கி.மீ. தூரத்துக்கு ரயில் பாதைகளை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு, தூண்களும் அமைக்கப்பட்டன. வேளச்சேரியை அடுத்து புழுதிவாக்கம், ஆதம்பாக்கம், வாணுவம்பேட்டை ஆகிய இடங்களில் ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் ஏற்கெனவே நிறைவடைந்துள்ளன. தற்போது ஆதம்பாக்கம் வரையில் ரயில் தண்டவாளங்கள், ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் முடிந்துள்ளன.

இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:

சென்னையில் கடற்கரை - தாம்பரம் மார்க்கத்தில் உள்ள பரங்கிமலையையும், பறக்கும் ரயில் முனையமான வேளச்சேரியையும் இணைத்தால், அதைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் சாலைப் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும். மின்சார ரயில் பயணிகளுக்கும் வசதியாக இருக்கும். இதை கருத்தில்கொண்டே வேளச்சேரி - பரங்கிமலை ரயில் திட்டம் தொடங்கப்பட்டது.

ஆனால், ஆதம்பாக்கம் - பரங்கிமலை இடையே சுமார் 500 மீட்டர் தூரத்துக்கு நிலத்தைக் கையகப்படுத்துவதில் நீண்ட நாட்களாக பிரச்சினை நீடித்தது. இதற்கு சமீபத்தில்தான் தீர்வு காணப்பட்டது. கரோனா பாதிப்பால் பணிகளை உடனடியாக தொடங்க முடியவில்லை. தற்போது மீண்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த ஆண்டு ஜூலை மாதத்துக்குள் பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளோம்.

இதற்கிடையே, வேளச்சேரி - ஆதம்பாக்கம் வரையிலான திட்டப் பணிகளை நிறைவு செய்துள்ளோம். இந்த தடத்தில் ரயில் சேவை தொடங்க ரயில்வே பாதுகாப்பு ஆணையருக்கு அழைப்பு விடுத்துள்ளோம். எனவே, இந்த தடத்தில் பாதுகாப்பு ஆணையர் கொண்ட குழுவினர் விரைவில் வந்து ஆய்வு நடத்தி, ரயில் சேவை தொடங்க ஒப்புதல் அளிப்பார் என எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x