Published : 29 Jul 2021 03:12 AM
Last Updated : 29 Jul 2021 03:12 AM

நலிவுற்ற குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை மீட்க முன்னாள் அரசுச் செயலர் தலைமையில் குழு அமைப்பு

சென்னை

தமிழக குறு, சிறு, நடுத்தரத் தொழில்துறைச் செயலர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பதுடன் வேலைவாய்ப்பு மற்றும் ஏற்றுமதியில் குறிப்பிடத்தக்க பங்கை வழங்கி வருகின்றன. கரோனா தொற்று மற்றும் பல்வேறு பொருளாதாரக் காரணங்களால் பாதிக்கப்பட்ட இந்நிறுவனங்கள், மிகவும் கடினமான சூழலை சந்தித்து வருகின்றன. பேரவையில் ஆளுநர் ஆற்றிய உரையில், ‘நலிவுற்ற குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை மீட்டெடுப்பதற்கான திட்டங்களை வகுப்பதற்காக தொழிலதிபர்கள், வங்கியாளர்கள், நிதித்துறை வல்லுநர்கள், அரசு அலுவலர்கள் அடங்கிய நிபுணர் குழு அமைக்கப்படும்’ என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை மீட்பதற்கான திட்டங்களை வகுப்பதற்கான குழுவை ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியும் தொழில்துறை முன்னாள் செயலருமான ந.சுந்தரதேவன் தலைமையில் அமைத்து அரசு உத்தரவிட்டுள்ளது.

இக்குழுவில், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியரும், மாநில வளர்ச்சிகொள்கைக் குழுவின் பகுதிநேர உறுப்பினருமான எம்.விஜயபாஸ்கர், இந்திய ரிசர்வ் வங்கியின் சிறு, நடுத்தர நிறுவன நிதி உள்ளிட்ட குழுக்களின் முன்னாள் உறுப்பினர் பிந்து ஆனந்த், இந்திய சிறுதொழில்கள் மேம்பாட்டு வங்கி (சிட்பி) முன்னாள் தலைவர் பாலசுப்பிரமணியம், ஆம்பியர் மின்சார வாகன நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ஹேமலதா அண்ணாமலை, இந்திய ஏற்றுமதி கழகங்கள் கூட்டமைப்பின் மண்டல தலைவர் இஸ்ரார் அகமது, தமிழ்நாடு சிறு மற்றும் சிறிய தொழில்கள் சங்கம் (டான்ஸ்டியா) தலைவர் அன்புராஜன், பட்டயக் கணக்காளர்ஆனந்த் ஆகிய 7 பேரும் உறுப்பினர்களாக இருப்பார்கள்.

அலுவல் சாரா உறுப்பினர்களாக நிதித்துறை, தொழில்துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறைகளின் செயலர்கள், மாநில அளவிலான வங்கியாளர்கள் குழுவின் தலைவர் ஆகியோர் இருப்பர். தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநர் குழுவின் உறுப்பினர் - செயலராக பணியாற்றுவார்.

இந்தக் குழு தமிழகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அவற்றில் இருந்து நிறுவனங்களை மீட்டுஎடுப்பதற்கு தேவையான உடனடி, குறுகிய மற்றும் நீண்டகால நடவடிக்கைகளை பரிந்துரைக்கும்.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு தேவையான கடன் வசதி பெறவும், ஏற்றுமதியை மேம்படுத்த தேவையான ஆலோசனைகளையும் இக்குழு வழங்கும். தேவையான உள்கட்டமைப்பு, வணிகம் புரிவதை எளிமையாக்குதல், மனித ஆற்றல் தொடர்பாகவும் இக்குழு ஆய்வு செய்யும். மாநிலத்தின் பின்தங்கிய பகுதிகளில் தொழில் வளர்ச்சியை உயர்த்த ஆலோசனை வழங்கவும் இக்குழு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இக்குழு 3 மாதங்களுக்குள் அரசுக்கு அறிக்கை அளிக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x