Published : 28 Jul 2021 03:15 AM
Last Updated : 28 Jul 2021 03:15 AM

கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு

தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாககோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்கள், வட மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன்கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் நேற்று வெளியிட்ட அறிக்கை:

தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாகமேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்கள், வட மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் 28-ம் தேதி (இன்று) ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். 29-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை கோவை, நீலகிரி மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், அதையொட்டிய உள் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் லேசான மழை பெய்யும். செவ்வாய்க்கிழமை காலை வரையான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூர் மாவட்டம், புவனகிரியில் 80 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

தென்மேற்கு வடக்கு மற்றும் மத்திய அரபிக்கடல் பகுதிகளில் வரும் 31-ம் தேதி வரை 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.

இவ்வாறு அறிக்கையில் கூறப் பட்டுள்ளது..

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x