Published : 27 Jul 2021 04:01 PM
Last Updated : 27 Jul 2021 04:01 PM

தேர்தலில் எனது கட்சியினரே எனக்கு எதிராகச் செயல்பட்டனர்: துரைமுருகன் வருத்தம்

வேலூர்

தேர்தலில் எனது கட்சியினரே எனக்கு எதிராகச் செயல்பட்டனர். எப்படியோ 2 ஆயிரம் பேரின் தபால் ஓட்டுகளால்தான் ஜெயித்தேன் என்று திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

காட்பாடி தொகுதி திமுக சார்பில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று (ஜூலை 26) மாலை நடைபெற்றது. சித்தூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற அந்தக் கூட்டத்தில் திமுக பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் பேசியதாவது:

''எங்கோ குடியாத்தத்தில் இருந்து வந்த ஒருவர், சேர்காடு எங்கிருக்கிறது, அம்மோவார்பள்ளி எங்கிருக்கிறது என்று தெரியாத ஒருவர் இந்தத் தேர்தலில் எனக்காக உழைத்தார்.

தேர்தலில் எனது கட்சியினரே எனக்கு எதிராகச் செயல்பட்டனர். நான் எப்படியோ 2 ஆயிரம் பேர் போட்ட தபால் ஓட்டுகளால்தான் ஜெயித்தேன். ஆனால், என் விளைநிலத்தில் (தொகுதியில்) இருந்து ஏன் பயிர் விளையவில்லை என்ற காரணம் தெரியவேண்டும். அதைத்தான் நான் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.

காட்பாடி தொகுதியில் மட்டுமில்லை, தமிழகத்தில் பல இடங்களில் இதேபோல் நடந்திருக்கிறது. நான் அதைப் பற்றி எல்லாம் கவனம் கொண்டுள்ளேன். என் தொகுதி என்பதால் அதிகம் கவனம் எடுத்திருக்கிறேன்.

முதலாவது எங்கேயோ இருந்து வந்தவர் அண்ணனையே ஜெயித்துவிடுவாரா என்று சும்மா இருந்தார்கள். இரண்டாவது, சரியாக வேலை செய்யாதது. நான் கடைசி 5 நாட்கள் வெளியே வந்திருந்தால் இன்னும் சமாளித்திருப்பேன். உடல்நிலை சரியில்லாததால் படுத்துவிட்டேன். மூன்றாவதாக, சொன்னால் வருத்தப்படக் கூடாது, சொல்லாமலும் இருக்கக் கூடாது.

எம்ஜிஆரின் படைபலம், பண பலத்துக்குத் தலை வணங்காத என்னுடைய நண்பர்கள் பல பேர், இந்த முறை பணத்திற்கு விலை போயிருக்கிறார்கள். இது வெட்கித் தலைகுனியக்கூடிய சமாச்சாரம். எடுத்தேன் கவிழ்த்தேன் என்று சொல்லவில்லை. இந்த முறை நான் பெற வேண்டிய வெற்றி அப்படிப்பட்டது.

எப்படி நடந்தது என்று தளபதியிடம் சொல்லி, பல இடங்களில் சுற்றி வாங்கிய ரிப்போர்ட் என் கையில் இருக்கிறது. யார், யாருடன் எல்லாம் போனில் பேசினார்கள் என்ற டேப் என்னிடம் இருக்கிறது. யார் யார் எவ்வளவு வாங்கினார்கள் என்ற விவரமும் என் கையில் இருக்கிறது. யார் மூலமாக வாங்கினார்கள் என்பதும் தெரியும். பின்புறமாகச் சென்று பணத்தை வாங்கச் சொல்லி சமாதானம் செய்தார்கள் என்றும் தெரியும். என்ன குறை வைத்தேன் உங்களுக்கு. நான் இந்தத் தேர்தலுடன் ஓய்வு பெறலாம் என்று நினைத்தேன். ஆனால், ஓய்வு பெற மாட்டேன். இன்னும் என் கட்சிக்காக அயராது பாடுபடுவேன்''.

இவ்வாறு அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x