Published : 27 Jul 2021 03:13 AM
Last Updated : 27 Jul 2021 03:13 AM
கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில்இருந்தபோது எதையும் செய்யாமல், திமுக அரசை விமர்சிக்க அதிமுகவுக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரான என்.சங்கரய்யாவின் நூற்றாண்டு பிறந்தநாள், மக்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்ட விழாவாகமாறியது. இதேபோல, மறைந்த ஏ.நல்லசிவன், ஆர்.உமாநாத், ஏ.பாலசுப்பிரமணியன், கே.முத்தையாவின் நூற்றாண்டு விழாக்களும் கொண்டாடப்படும்.
கரோனா தடுப்பு உட்பட பலவரவேற்கத்தக்க நடவடிக்கைகள் திமுக ஆட்சியில் எடுக்கப்பட்டு வருகின்றன.
விளை நிலங்களில் எரிவாயு குழாய் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என்பதில் மார்க்சிஸ்ட் உறுதியாக உள்ளது. மதவாத பாஜகவை எதிர்ப்பதில் திமுகவுடன் இணைந்து போராடுவோம். அதேநேரம், மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்காக திமுக அரசை வலியுறுத்துவோம். மக்கள் பிரச்சினைகளுக்கு போராடுவதில் மார்க்சிஸ்ட்எந்த சமரசமும் செய்து கொள்ளாது.
திமுக தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை 3 மாதங்களில் நிறைவேற்ற முடியாது. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தபோது எதையும் செய்யாமல், திமுக அரசை விமர்சிக்க அதிமுகவுக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை.
கியூபா மீதான பொருளாதார தடையை நீக்க வலியுறுத்தி வரும்29-ம் தேதி இடதுசாரிகள், விசிக ஆகிய கட்சிகளின் சார்பில் சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார். மார்க்சிஸ்ட் மத்தியக் குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT